முகப்பு
செய்திகள்

எனக்கும் வைரமுத்துவுக்கும் ஒரு விருதும் வழங்காதது அரசியல் இருட்டடிப்பு: பா. விஜய் சீற்றம்

விருதுக்குழுவினருக்கு மனசாட்சி என ஒன்று இருக்கிறதா என்பது என்னுடைய கேள்வி...

Updated On : 15 ஜூலை 2017, 12:55 pm IST
பகிர்:

ஆறு வருடக் காலங்களில் நானும் வைரமுத்துவும் விருதுக்குரிய ஒரு பாடலைக்கூடவா எழுதவில்லை என கவிஞர் பா. விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

2009 - 2014-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்த் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த திடீர் அறிவிப்பால், தமிழ் திரையுலகினர் பலரும் மகழ்ச்சியில் உள்ளனர். விருது பெற்றுள்ள நடிகர்கள், நடிகைகள், குணச்சித்திர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் திரையுலகின் பல தரப்பினரும் தமிழக அரசின் விருதுகளை வரவேற்பதாக தெரிவித்துள்ளனர். விருது பெற்றுள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர்கள் மனோபாலா, விமல், ஜெயப்பிரகாஷ், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், இயக்குநர்கள் சற்குணம், அருண்குமார் உள்ளிட்ட பலர் மாநில அரசின் விருது பெற்றமைக்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இயக்குநர் சுசீந்திரன் தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு குறித்து தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். இதே போல் அங்காடி தெரு படத்தில் நடித்த இயக்குநர் ஏ.எல். வெங்கடேஷ், தனக்கு விருது அளிக்காமல் எந்தத் தகுதியின் அடிப்படையில் பிரகாஷ் ராஜூக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இந்நிலையில் பாடலாசிரியர் பா. விஜய்யும் தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: 

அறிவிக்கப்பட்ட விருதுகளில் பாடலாசிரியர் விருதுகளில் மட்டும் பெரிய இருட்டடிப்பு நிகழ்ந்துள்ளதாக உணர்கிறேன். இந்த ஆறு வருட விருது அறிவிப்புகளில் எனக்கும் வைரமுத்துவுக்கும் ஒரு விருது கூட அறிவிக்கவில்லை. நானும் அவரும் இந்த ஆறு வருடங்களில் ஒரு விருதுக்குரிய பாடலைக்கூடவா எழுதவில்லை? இது ஒட்டுமொத்தமான அரசியல் இருட்டடிப்பு ஆகும். கலையில் அரசியல் இருட்டடிப்பு இருக்கக்கூடாது என எனது கடுமையான கண்டனத்தைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏழாம் அறிவு படத்தில் வெளிவந்த இன்னும் என்ன தோழா, கோ படத்தில் வெளிவந்த முன்பனியே, காவியத் தலைவன் படத்தின் அனைத்து பாடல்களும் என இந்தப் பாடல்கள் எல்லாம் அனைத்து விருதுகளுக்கும் தகுதியானவை. ஆனால் இவற்றை வேண்டுமென்றே புறந்தள்ளிவிட்டு இருட்டடிப்பு செய்துள்ளார்கள். விருதுக்குழுவினருக்கு மனசாட்சி என ஒன்று இருக்கிறதா என்பது என்னுடைய கேள்வி என்று அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.