முகப்பு
செய்திகள்

ஒரு பிரபலத்தின் மரணத்தால் கவனமிழந்த 8 வயது சிறுவனின் கொடூரக் கொலை! நடிகர் பிரசன்னா ட்விட்டரில் ஆவேசம்!

சமூக வலைதளங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் ட்விட்டரில் தங்கள் படங்களைப் பற்றியும் ரசிகர்களை சந்திக்கும்

Updated On : 26 பிப்ரவரி, 2018 at 4:44 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:50 PM

சமூக வலைதளங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் ட்விட்டரில் தங்கள் படங்களைப் பற்றியும் ரசிகர்களை சந்திக்கும் ஓரிடமாகவும் பயன்படுத்தி வருகிறார்கள் நடிகர்கள். இவற்றுடன் சமூக கருத்துகளையும் சிலர் பதிவு செய்வதுண்டு. அவர்களுள் நடிகை கஸ்தூரி மற்றும் நடிகர் பிரசன்னா குறிப்பிடத்தக்கவர்கள். 

அண்மையில் விழுப்புரம் அருகே திருக்கோவிலூரில் அடையாளம் தெரியாத கும்பலால் ஆராயி என்பவரும் அவரது இரண்டு பிள்ளைகளையும் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இதில் 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர்  அருகே உள்ள வெல்லம்புத்தூர் எனும் கிராமத்தில் ஆராயி என்பவர் 13 வயது மகள் தனம், மற்றும் 9 வயது மகன் சமயன் ஆகியோருடன் வசித்து வந்தார்.

Advertisement

சனிக்கிழமை இரவு (24 பிப்ரவரி)  வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, ஆராயி மற்றும் அவரது குழந்தைகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். மூவரும் பலத்த காயங்களுடன் தலை, கழுத்து ஆகிய இடங்களில் தாக்கப்பட்டும் கத்தியால் வெட்டப்பட்டும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட கிராமத்தினர் உடனடியாகப் போலீசாருக்கு ஆம்புலன்ஸுக்கும் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த அரகண்டநல்லூர் போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான் எனத் தெரிந்தது.

பலத்த காயங்களுடன் ஆராயி மற்றும் தனம் இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுவன் இறந்தது, சந்தேக மரணம் என காவல்துறையினர் முதலில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் ஆராயியின் உறவினர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார் அதனை கொலை வழக்காக பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் அந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் படுகாயம் அடைந்த சிறுவனின் தாய் ஆராயிக்குத் தெரிந்த நபர் ஒருவர், இரவு குடிபோதையில் 14 வயது மகளிடமும் தவறாக நடக்க முயற்சிக்கையில் அதனை தடுக்க முயன்ற போது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக  காவல் துறையினர் நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து நடிகர் பிரசன்னா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஒரு பிரபல நடிகையின் மரணத்தால் மட்டுமே இந்தச் செய்தி மறக்கப்பட்டதா அல்லது வேறு காரணமா? மதுக்களும், ஆராயிகளும், வன்புணர்வுகளும் நாளும் நடந்தேறும் நம் ஊரைச் சீர் செய்யாமல் சிரியாவை நினைத்து உச்சுக்கொட்டி என்ன பயன்? மனிதம் மரித்ததெப்போது? என்று தனது கோபத்தைப் பதிவு செய்துள்ளார் பிரசன்னா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.