முகப்பு
செய்திகள்

தெலுங்கு 'நாச்சியார்’ஆக அவதாரம் எடுக்கவிருக்கிறார் நடிகை அனுஷ்கா!

பாலாவின் இயக்கத்தில் அண்மையில் வெளியான நாச்சியார் வெற்றிப் பெற்றது. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவெடுத்த டோலிவுட் தயாரிப்பாளர்,  

Updated On : 15 மார்ச், 2018 at 1:25 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:59 PM

பாலாவின் இயக்கத்தில் அண்மையில் வெளியான நாச்சியார் வெற்றிப் பெற்றது. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவெடுத்த டோலிவுட் தயாரிப்பாளர், ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் அனுஷ்காவை நடிக்கக் கேட்டுள்ளனர்.

அனுஷ்கா தனது அடுத்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பை இன்னும் வெளியிட்டிருக்கவில்லை. ஆனால் அது நிச்சயம் நாச்சியார் ரீமேக்காகத் தான் இருக்கும் என்கின்றன தெலுங்கு ஊடகங்கள். நம்பத்தகுந்த வட்டாரங்களில் வந்த தகவல்களின்படி,  கல்பனா கோனேறு எனும் தயாரிப்பாளர் நாச்சியாரின் தெலுங்கு உரிமையை வாங்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிக்க அனுஷ்கா சரியான தேர்வாக இருப்பார் என்று அனுஷ்காவை அணுகியுள்ளது படக்குழு. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வமான செய்தி வெளிவரும்.

நாச்சியார் கடந்த மாதம் தமிழ்நாட்டில் வெளியாகி ஜோதிகாவுக்கு பரவலான பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது. இதில் ஜோதிகா கோபமான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அடிக்கடி கெட்ட வார்த்தைகளைப் பேசுபவராகவும் சித்திரிக்கப்பட்டிருப்பார் (படத்தின் டீஸர் வெளியான போது சர்ச்சைக்குள்ளனாது). ஜி.வி.பிரகாஷ், இவானா, ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் பாலாவின் வித்தியாசமான படமென தமிழ் திரை ரசிகர்கள் கொண்டாடினர். இப்படம் திரை விமரிசகர்களாலும் பாராட்டப்பட்டது. வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் அண்மையில் இப்படம் வெற்றிபெற்றது.

Advertisement

இதற்கு முன் ஜோதிகா நடித்து பெரும் வெற்றிப் பெற்ற படமான சந்திரமுகி, தெலுங்கில் நாகவல்லியாக ரீமேக் ஆனபோது அதில் நடித்தவர் அனுஷ்காதான். அவருடன் விக்டரி வெங்கடேஷ், ரிச்சா கங்கோபாத்யா, ஷ்ரத்தா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்தனர். 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அனுஷ்கா நடித்த பாகமதியும் கவனம் பெற்று வெற்றிப்படமானது. அனைவராலும் பரவலான பாராட்டைப் பெற்ற இந்தத் திரைப்படம் அனுஷ்காவின் நடிப்பாற்றலை வெளிப்படுத்தும்விதமாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது. 

அனுஷ்கா தொடர்ந்து தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் டோலிவுட்டில் நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்கிறார். பாகுபலி அவருக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்த படம் எனலாம். பாகுபலி இரண்டு பாகங்களிலும் அனுஷ்காவின் பங்களிப்பு முக்கியமானது. கதை நாயகியாகவும், கதையின் மையப் பாத்திரமாகவும் அனுஷ்காவின் நடிப்பு பாகுபலியின் வெற்றிச் சிகரத்தில் மகுடமாக கருதப்பட்டது.

இந்நிலையில் அனுஷ்கா நாச்சியாராக அடுத்து நடிக்கிறார் என்ற செய்தியை அறிந்து டோலிவுட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எந்த மொழியில் பேசினால் என்ன நாச்சியார்கள் சக்தி மிகுந்தவர்களே!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.