பேபி ரீமேக் உரிமைக்காகக் கடும் போட்டி!
தெலுங்கில் வெளியான ‘பேபி’ திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்க ஹிந்தியில் கடும் போட்டி நிலவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சாய் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி, விராஜ் அஸ்வின் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘பேபி’.
காதலியால் ஏமாற்றத்துக்கு உள்ளாகும் நாயகனின் கதையாக உருவான இப்படம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி தெலுங்கில் வெளியானது.
வெளியாகி 12 நாள்களே ஆன நிலையில், இப்படம் உலகளவில் ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.7 கோடியில் தயாரான ‘பேபி’ வசூலில் ஆந்திர பாக்ஸ்ஆஃபிஸை கலங்கடித்து வருகிறது.
Advertisement
இதையும் படிக்க: சந்திரமுகி 2: புதிய விடியோ வெளியீடு
விஜய் தேவரகொண்டாவுக்கு ‘அர்ஜுன் ரெட்டி’ கைகொடுத்ததுபோல் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு ‘பேபி’ பெரிய வரவேற்பைக் கொடுத்திருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்க பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிபோட்டு வருவதாகவும் அதிக விலைக்குக் கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.