தனுஷை இயக்குநராக பார்க்க பயம்: நடிகர் சரவணன்
சேலத்தில் ராயன் திரைப்படம் பார்த்த நடிகர் சரவணன் பேட்டி.
நடிகர் தனுஷை இயக்குநராக பார்த்தாலே பயமாக இருக்கும் என்று நடிகர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் திரையரங்குகளில் இரண்டாவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தில் நடித்த நடிகர் சரவணன் தனது குடும்பத்தினருடன் சேலத்தில் உள்ள திரையரங்கில் ராயன் திரைப்படத்தை இன்று பார்த்தார்.
Advertisement
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரவணன்,
”தனுஷ் இயக்கத்தில் தான் நடித்த முதல் படம். அவருடன் நடிப்பதும் இதுவே முதல்முறை. இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஆனது மகிழ்ச்சி அளிக்கிறது.
நடிகர் தனுஷிடம் நட்பாக பேசலாம், ஆனால் இயக்குநர் தனுஷிடம் அப்படி பேச முடியாது. அவரை இயக்குநராக பார்த்தாலே பயமாக உள்ளது.
இயக்குநர் தனுஷ் பேய் மாதிரி வேலை செய்வார். நடிகர் எம்.ஜி.ஆர். படத்தை இயக்கி வெற்றி பெற்றது போல நடிகர் தனுஷ் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் கொடுத்துள்ளார்.
எந்த நடிகராலும் தனுஷ் போல படத்தை இயக்க முடியாது. படத்தை இயக்குவதில் நடிகர் தனுஷ் கிங்” என்றார்.