‘வருஷமெல்லாம் வசந்தம்’ இயக்குநர் தற்கொலை!
இயக்குநர் ரவி ஷங்கர் தற்கொலை செய்துகொண்டார்.
சிறுகதை எழுத்தாளரான ரவி ஷங்கர், சினிமாவில் இயக்குநர்கள் பாக்யராஜ், விக்ரமன் போன்றவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார்.
தொடர்ந்து, 2002 ஆம் ஆண்டு நடிகர்கள் மனோஜ், குணால் ஆகியோரை கதாநாயகர்களாக வைத்து, ‘வருஷமெல்லாம் வசந்தம்’ என்கிற படத்தை இயக்கினார். குடும்பப் படமாக உருவான இது, வசூல் வெற்றியைப் பெற்றது.
Advertisement
ஆனால், ரவி ஷங்கருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையில்லை. இதனால், சில படங்களுக்கு பாடல்களை எழுதினார். சூர்ய வம்சம் திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘ரோசாப்பூ.. சின்ன ரோசாப்பூ’ பாடல் இவர் எழுதியதுதான்.
இந்த நிலையில், ரவி ஷங்கர் நேற்று (ஜூலை 12) சென்னை கே.கே. நகரில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டுகளாக சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
*தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கான நம்பிக்கையைப் பெற தமிழக அரசின் உதவி எண் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம்.