இளையராஜாவின் இசையே நடிப்பைக் கற்றுத்தரும்: தனுஷ் பேச்சு!
இளையராஜாவின் பயோபிக்கில் நடிப்பது குறித்து மனம் திறந்து பேசிய நடிகர் தனுஷ்.
1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். இன்றும் அவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கவனத்தையும் பெறுகின்றன.
சமீபத்தில் வெளியான மலையாளப் படமான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படத்திலும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலைப் பயன்படுத்தி பெரிய வெற்றியைப் பெற்றனர்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் தொடர்பான துவக்க சென்னையில் நடைபெற்றது.
Advertisement
இவ்விழாவில் இளையராஜா, கமல்ஹாசன், தனுஷ், வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டனர். இதில் நடிகர் தனுஷ் பேசியதாவது:
இரவில் தூக்கம் இல்லையென்றால் நாம் இளையராஜாவின் பாடல்களை கேட்போம். ஆனால் நான் அவரைப் போலவே நடித்து நடித்துப் பார்த்துவிட்டு தூங்குவேன். நான் சினிமாவுக்கு வந்த புதியதில் இருந்து இப்போது வரை இளையராஜாவின் இசையை வைத்துதான் நடிக்க கற்றுக் கொள்கிறேன். ஒரு காட்சி அல்லது ஒரு சூழ்நிலைக்கு எப்படி நடிக்க வேண்டும் என்றால் அவரது இசையை தனியாக போட்டுக் கேட்பேன். அது எனக்கு நடிப்பைக் கற்றுத்தரும். நான் இப்படி செய்வதை வெற்றி மாறன் பார்த்திருக்கிறார்.
இளையராஜாவாக நடிப்பதில் எனக்கு கர்வம் இருக்கிறது. அவரைபோல எப்படி நடிப்பேன் என எனக்கு சந்தேகமில்லை. ஏனெனில் அவரது இசையே எனக்கு நடிப்பைக் கற்றுத்தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒரு கலைஞனாக எனக்கு இது மிகப்பெரிய மகிழ்ச்சி, நெகிழ்ச்சியாக இருக்கிறது எனக் கூறினார்.