சண்டைக் காட்சிகள், பஞ்ச் டயலாக் இல்லாத விஜய் படம்!
முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி... அடிதடிக் காட்சிகளில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் மிக அமைதியானதாக வந்த நண்பன் படம் பற்றி...
நடிகர் விஜய் என்றாலே அவரது நடனமும் சண்டைக் காட்சிகளும்தான் நமக்கு நினைவுக்கு வரும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை விஜய்யின் சண்டைக் காட்சிகளுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அப்படிப்பட்ட விஜய்யின் படங்களில் ஒரு படத்தில் சண்டைக் காட்சிகளே இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதுவும் அவரது ஆரம்ப காலகட்டத்தில் அல்ல, மாஸ் ஹீரோவாக அவர் வலம் வந்த காலகட்டத்தில் சண்டைக் காட்சி இல்லாத ஒரு படத்தில் அவர் நடித்தது ஒரு ஆச்சரியமே. அப்படம் குறித்து பார்க்கலாம்
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்தியராஜ் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்த படம் நண்பன். இது 2009 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் படமாகும்.
பெற்றவர்களின் ஆசையைப் பிள்ளைகள் மீது திணிக்காமல் படிப்பு விஷயத்தில் பிள்ளைகளின் விருப்பப்படி விட்டால், அவர்கள் விரும்பிய துறையில் அவரவர் முன்னுக்கு வர முடியும் என்ற கருத்தைக் கதையாகக் கொண்ட படம் நண்பன். இயல்பான விஜய் படங்களில் இருக்கும் அடிதடி, பஞ்ச் டயலாக், ஹீரோயிசம் எதுவும் இல்லாமல் ஒரு அமைதியான மாணவனாக விஜய் இப்படத்தில் நடித்திருப்பார். பல இடங்களில் பார்வையாளர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் வசனங்களைப் பேசியிருப்பார் விஜய்.
Advertisement
Advertisement
ஷங்கர் - விஜய் கூட்டணி
தமிழ்த் திரை உலகில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். முன்னனி ஹீரோக்கள் இவரது இயக்கத்தில் நடிக்க வேண்டுமெனக் காத்திருந்த காலங்கள் உண்டு. அதேபோல் ரஜினி, கமல் ஆகியோருக்கும் சிவாஜி, இந்தியன் போன்ற சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர். அவரது இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படம் நண்பன். முதல்வன் படத்தில் கதாநாயகனாக விஜய் முதலில் ஒப்பந்தமாகியிருந்ததும் பின்னர் சில காரணங்களால் அர்ஜுன் நடித்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே. ஒருவேளை முதல்வன் படத்தில் விஜய் நடித்திருந்தால் அன்றே கணித்தார் மீம்ஸ் பட்டியலில் ஷங்கரும் இணைந்திருப்பார்.
விஜய்யின் மாறுபட்ட படம்
அனைத்து ஹீரோக்களும் காதல், ரௌடியிசம், போலீஸ் என அதிரடிக் கதைகளைத் தேர்வு செய்துகொண்டிருந்தபோது விஜய்யின் இந்தப் படத்தேர்வு பேசுபொருளானது. பொதுவாக விஜய் படங்களில் மாஸ் என்ட்ரி, அறிமுகப் பாடல், பஞ்ச் டயலாக்குகள், அதிரடி சண்டைக் காட்சிகள், பயங்கரமான வில்லன் என ஒரு வழக்கம் இருக்கும்.
ஆனால் நண்பன் திரைப்படத்தில் இது எதுவும் இருக்காது. 2012 ஆம் ஆண்டு இப்படம் வெளியானது அதே ஆண்டில்தான் விஜய்யின் துப்பாக்கி படமும் வெளியானது. இரண்டும் வெவ்வேறு துருவங்கள். அதற்கு முன்னால் விஜய், காவலன், வேலாயுதம், வில்லு, வேட்டைக்காரன், சுறா போன்ற படங்களில் நடித்திருந்தார். நண்பன் விஜய்யின் 53-வது படம். அதேபோல் 2 கதாநாயகர்களுடன் இணைந்து விஜய் நடித்த முதல் படமும் நண்பன்தான். படத்தில் ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த்திற்கு விஜய்க்கு நிகராக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும். வைரஸ் கதாபாத்திரத்தில் வரும் சத்தியராஜ் நாம் பார்த்து பயப்படும் கறாரான கல்லூரி முதல்வராகவே படம் முழுக்க வலம் வந்திருப்பார். நண்பன் படத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை தற்போது இருக்கும் கல்வி முறை குறித்து விஜய் விமர்சித்திருப்பார். படத்தின் இறுதியில் அவர் சொல்லும் கல்வி முறையைப் பள்ளியில் நடைமுறைப்படுத்தியிருப்பார்.
விஜய் திரைப்பயணத்தில் கில்லி, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி போன்ற படங்கள் அவரது அதிரடியான சண்டைக் காட்சிகளுக்காக ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. ஆனால் அந்த வரிசையில் நண்பன் முற்றிலும் மாறுபட்ட படமாக அமைந்தது. ஒரு மாஸ் ஹீரோவாக உச்சத்தில் இருந்த நேரத்தில் கூட, கதையின் மீது நம்பிக்கை வைத்து சண்டைக் காட்சிகள் இல்லாத ஒரு படத்தில் விஜய் நடித்தது அவரது நடிகர் என்ற அடையாளத்தையும் வெளிப்படுத்தியது.
ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு சண்டைக் காட்சிகளோ, பஞ்ச் வசனங்களோ மட்டுமே அவசியமில்லை; வலுவான கதையும் அழுத்தமான கருத்தும் இருந்தால் ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதை நண்பன் நிரூபித்தது. அதனால்தான் வெளியாகி பல ஆண்டுகள் கடந்த பிறகும், விஜய்யின் வித்தியாசமான மற்றும் துணிச்சலான முயற்சிகளில் ஒன்றாக நண்பன் ரசிகர்களால் நினைவு கூறப்படுகிறது.
வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற படம். விஜய் ரசிகர் அல்லாதவரும் ரசித்த படமாக இருந்தது. இன்றும் டி.வியில் ஒளிபரப்பாகும்போது அனைவரும் கண்டு ரசிக்கும் படம்.
Reflecting on the movie Nanban, which arrived as a remarkably calm film during an era dominated by action-packed sequences..
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.