FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

கே. பாக்யராஜ்! திறந்தே இருந்த திரைக்கதைப் பள்ளிக்கூடம்!!

இயக்குநர், நடிகர் பாக்யராஜ் மறைவையொட்டி அவரின் திரைப் படைப்புகள் குறித்து...

Updated On : 27 ஜூன் 2026, 12:21 pm IST
- Dinamani
பகிர்:

எம்.திரவியமுருகன்

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், கதையின் நாயகனாகவும் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் பாக்யராஜ் . தொடர்ந்து வந்த அவருடைய சீடர்களுக்கு அந்தப்பட்டியலில் இடம் உண்டு என்றாலும் நீண்ட காலம் நிலைத்து நின்றவர் பாக்யராஜ் மட்டுமே.அவர் இயக்காத ஆனால் அவர் படைப்பின் சாயலையொத்த காட்சிகள் வந்த படங்களும் அதிகம். இது பாக்யராஜ் பாணி என்று சொல்லும் அளவுக்கு தனித்த அடையாளத்துடன் தமிழ்த் திரையுலகில் வலம் வந்தவர்.

எளிமையான குடும்பக்கதையில் அடுத்தடுத்து சுவாரஸ்ய காட்சிளை அமைப்பது அவ்வளவு எளிதல்ல. அது பாக்யராஜ்க்கு கைவரப்பெற்றது. பாத்திரப்படைப்புகள், கதை சொல்லும் திறன் போன்றவற்றை அடிப்படையாக் கொண்டு 3 விதங்களில் பாக்யராஜ் பாணியை விவரிக்க முடியும்

Advertisement

Advertisement

1. எளிய மனிதனே கதாநாயகன்

தமிழ்த்திரையில் நட்சத்திர நடிகர்கள் தங்கள் பிம்பம் சரிவதை ஏற்கமாட்டார்கள். அவர்கள் வீரர்கள். யாருக்கும் அஞ்சாதவர்கள். இமைக்கும் நேரத்திற்குள் ஐம்பது, அறுபது பேரை துவைத்து எடுப்பார்கள். ஆனால் பாக்யராஜ் எனும் கதைநாயகன் உடல் வலிமை அற்றவன். பலவீனங்களை உடையவன். ஆனால் புத்திக்கூர்மையின் பால் நம்பிக்கை உள்ளவன்.

கதையின் நாயகன் விண்ணில் இருந்த வந்தவன் என்ற மாயையில் இருந்து விடுபட்டு, இந்த மண்ணில் எங்களில் ஒருவன் என்ற எண்ணத்தை பார்வையாளர்களிடம் பதிய வைத்தார். முந்தானை முடிச்சு, இது நம்ம ஆளு கதாபாத்திரங்கள் இதற்கு சரியான எடுத்துக்காட்டுகள்.

2. திரைக்கதையில் முடிச்சுகள்

பாக்யராஜின் திரைக்கதைகளில் சிறிய தகவல்கள் ஒரு கட்டத்தில் பெரிய திருப்பங்களாக மாறும்.ஒரு துணைக்கதாபாத்திரம் கதையின் போக்கில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தும்.சின்னச் சின்ன முடிச்சுகள், ஆனால் வலுவான முடிச்சுகள். அவற்றை ஒவ்வொன்றாக அவிழ்க்க வேண்டும். நியாயம் செய்யும் வகையில் அந்த அவிழ்ப்புகள் நிகழ்த்தப்பட வேண்டும். வேகமாக அவிழ்ப்பு விபரீதத்தை ஏற்படுத்தும் என்ற சூட்சமம் அறிந்தவர். அந்த 7 நாள்கள் திரைப்படக்காட்சிகளை பாருங்கள். பாக்யராஜ் நிகழ்த்திய மாயாஜாலங்கள் புரியும்.

3. பெண் பாத்திரப் படைப்புகள்

பெண்கள் விரும்பும் இயக்குநராக பாக்யராஜ் போற்றப்பட காரணம் அவருடைய பெண் பாத்திரப்படைப்புகள். கணவன், மனைவிக்கு இடையேயான ஊடல் காட்சிகளில் தங்களை அந்தப் பாத்திரத்துடன் பொருத்திப் பார்த்தவர்கள் உண்டு. அதேபோன்று தனது கதையில் நாயகி அறிமுகமாகும் காட்சியிலேயே அந்தப்பெண்ணின் அத்தனை குணப்பாடுகளை உணர்த்திவிடும் திறன் பாக்யராஜ்க்கு இருந்தது.

ஜோதி (புதிய வார்ப்புகள்),சரோஜா (சுவரில்லாத சித்திரங்கள்),பரிமளம் (முந்தானை முடிச்சு),மேரி (அந்த 7 நாட்கள்), பாக்யலட்சுமி (சின்ன வீடு) பாத்திர அறிமுகங்களை பார்க்கும்போது இதை உணர முடியும்.

கதைநீரோட்டத்தை சீராக்குபவை பெண் பாத்திரங்கள் என்பதில் பாக்யராஜ்க்கு வலுவான நம்பிக்கை இருந்தது.

பிரமாண்டங்களுக்கு பின் ஓடாமல், கதைதான் பிரமாண்டம், திரைக்தைதான் அடித்தளம் என்று உணர்த்தியவரின் ஓட்டத்தை காலம் நிறுத்தியிருக்கிறது. என்றாலும் படைப்புகளின் வழியாக பாக்யராஜ் பாய்ச்சலை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார்.

summary

K Bhagyaraj A Screenwriting School That Was Always Open

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments