கல்லூரி மாணவர்களுக்கு சிங்கப்பூர் பல்கலை வழங்கும் ஐஆர்ஐஎஸ் இன்டர்ன்ஷிப்!
கல்லூரி மாணவர்களுக்கு சிங்கப்பூர் பல்கலை வழங்கும் ஐஆர்ஐஎஸ் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் விண்ணப்பிக்க..
சிங்கப்பூர் பல்கலைக்கழகமானது, சர்வதேச மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் (IRIS) 2026 திட்டத்தை அறிவித்திருக்கிறது. இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் கல்லூரி மாணவர்கள், சர்வதேச இன்டர்ன்ஷிப் வாய்ப்பைப் பெறலாம்.
தேசிய சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில், இன்டர்ன்ஷிப் மற்றும் ஆராய்ச்சி இம்மர்ஷன் (IRIS) படிக்க விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன. இது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சர்வதேச மாணவர்களுக்கு வழங்கும் ஒரு அற்புதமான இன்டர்ன்ஷிப் வாய்ப்பாக உள்ளது.
இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பயில உலகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த இன்டர்ன்ஷிப் திட்டம் சிறந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கிறது. மேலும், ஆராய்ச்சி இன்டர்ன்ஷிப் திட்டம் அனைத்து கல்வித் துறைகளுக்கும் பொதுவானது. எனவே ஒருவர் சர்வதேச அளவில் வெளிநாடு சென்று அங்கு கல்வி பயிலும் வாய்ப்பைத் தேடுபவராக இருந்தால், இது அவர்களுக்கான ஒரு சரியான வாய்ப்பு என்கிறார்கள்.
Advertisement
இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், உலகத் தரம் வாய்ந்த ஒரு பல்கலையில், அனுபவம் வாய்ந்த் பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் ஆராய்ச்சியில் ஈடுபடலாம். ஏற்கனவே, சிங்கப்பூர் பல்கலைக்கழகம் செய்து வரும் பல்வேறு திட்டங்களில் இணைந்து பணியாற்றவும், புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த கோடைகால இன்டர்ன்ஷிப் பயிற்சித் திட்டம் மாணவர்களின் தகவல் தொடர்புத் திறனையும் மேம்படுத்த உதவும் என்பது கூடுதல் அம்சம்.
இந்த இன்டர்ன்ஷிப் 2 மாதங்களைக் கொண்டது. 2026ஆம் ஆண்டு மே முதல் ஜூலை அல்லது ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை. இது முழுக்க முழுக்க நிதியுதவியுடன் கூடிய இன்டர்ன்ஷிப். பயணச் செலவுக்கான நிதியுதவி, தங்கும் வசதி மற்றும் மாதம் இன்டர்ன்ஷிப் தொகையும் வழங்கப்படுகிறது. இதில், தொழிற்சாலை ஆய்வு, நகர சுற்றுலா, தொழிற்துறையினருடன் கலந்துரையாடல் உள்ளிட்டவையும் அடங்கும். விண்ணப்பக் கட்டணம் கிடையாது. ஐஇஎல்டிஎஸ் தேர்வுத் தகுதி தேவையில்லை.