ஹமீது அன்சாரி வரும் 24-இல் ஆர்மீனியா, போலந்துக்கு பயணம்
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வரும் திங்கள்கிழமை (ஏப். 24) ஆர்மீனியா, போலந்து ஆகிய இரு நாடுகளுக்கு பயணம் தொடங்குகிறார்.
புது தில்லி: குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வரும் திங்கள்கிழமை (ஏப். 24) ஆர்மீனியா, போலந்து ஆகிய இரு நாடுகளுக்கு பயணம் தொடங்குகிறார்.
இதுதொடர்பாக, தில்லியில் வெளியுறவுத் துறைச் செயலர் பிரீத்தி சரண் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆர்மீனியா, போலந்து ஆகிய இரு நாடுகளில் வரும் திங்கள்கிழமை (ஏப். 24) முதல் 5 நாள்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
முதல்கட்டமாக, தில்லியிலிருந்து ஆர்மீனியா செல்லும் அவர் புதன்கிழமை (ஏப். 26) வரை அங்கு தங்கியிருப்பார். அப்போது அந்நாட்டின் அதிபர், பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக விவாதிப்பார்.
தொடர்ந்து யேரேவன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்களுடன் அவர் கலந்துரையாடுவார். பின்னர், அவர் போலந்துக்கு பயணம் மேற்கொள்வார். அங்கு அந்நாட்டின் அதிபர், பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசுவார்.
ஹமீது அன்சாரியுடன் அவருடைய மனைவி சல்மா அன்சாரி, மத்திய சிறு - குறு - நடுத்தர தொழில்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், எம்.பி.க்கள் சீதாராம் யெச்சூரி, டி.பி.திரிபாடி உள்ளிட்டோரும் உடன் செல்கின்றனர் என்றார் பிரீத்தி சரண்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.