முகப்பு
இந்தியா

நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் பதவியை இழக்கிறது காங்கிரஸ்!

மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய பலமில்லாததால், முக்கிய நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சி இழக்கவுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய பலமில்லாததால், முக்கிய நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சி இழக்கவுள்ளது.
இதுதொடர்பாக, மாநிலங்களவைச் செயலகத்தின் வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
மொத்தமுள்ள 8 மாநிலங்களவை நிலைக் குழுக்களில், 3 குழுக்களின் தலைவர் பதவி காங்கிரஸ் வசம் உள்ளது. உள்துறை விவகாரங்கள், அறிவியல் தொழில் நுட்பம், சட்டம் - நீதி, பணியாளர் விவகாரங்கள் ஆகியவை அந்தத் துறைகளாகும். 
இவற்றில், சட்டம்- நீதி, பணியாளர் துறை, பொதுமக்கள் குறை தீர்ப்பு ஆகிய விவகாரங்களுக்கான நிலைக் குழுவானது, அரசியல் கட்சிகளின் நிதி தொடர்பாக அறிக்கை அளிக்கும் முக்கிய நிலைக் குழுவாகும். அந்தக் குழுவின் தலைவராக, காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆனந்த் சர்மா தற்போது உள்ளார். அவருக்குப் பதிலாக, அந்தப் பதவியில் பாஜக எம்.பி. பூபேந்திர யாதவ் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 57-ஆகக் குறைந்துவிட்டதால், 3 நிலைக் குழுக்களின் தலைவர் பதவியில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் நீடிக்க முடியாது என்பதை கட்சித் தலைமையிடம் பாஜக மூத்த தலைவர்கள் தெரிவித்துவிட்டனர் என்று அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இதனிடையே, மத்திய அரசின் இந்த நடவடிக்கை, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறினார். நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகளை ஆளும் பாஜக அரசு தனது விருப்பத்துக்கு ஏற்ப மாற்ற முயலுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

முழு கட்டுரையைப் படிக்க →