தூய்மையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் பீகாரில் உள்ள சம்ப்ரான் எனும் பகுதியில் இருந்து மகாத்மா காந்தி சத்தியாக்கிரக யாத்திரையை மேற்கொண்டார். இதன் நூற்றாண்டு விழா பிகாரில் செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நாடாளுமன்றம் தொடங்கி நாடு முழுவதும் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டு மக்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாக மத்திய அரசு செயல்பட்டு வரும் போது அதை சீர்குலைத்து பிரிவினையை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
எங்கள் அரசானாது கோப்புகளை நிலுவையில் வைக்கும், கிடப்பில் போடும் நிலையை உடைத்து அனைத்தையும் செயல்படுத்தி வருகிறது. மக்களின் ஆசியோடு அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற வளர்ச்சியை விரும்பாத சிலருக்கு இது சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. அவர்கள் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஏழைகளின் வாழ்வாதாரம் உயர்வது சிலருக்கு இங்கு பிடிக்கவில்லை. அதை அவர்கள் விரும்பவும் இல்லை. அவ்வாறு ஏழைகளின் வாழ்வாதாரம் உயர்ந்துவிட்டால் அவர்களிடம் பொய் கூறி தவறாக வழிநடத்த முடியாது என்கிற பயம் தான் அதற்கு காரணம்.
எனவே தான் மத்திய அரசுக்கு எதிராக பல தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தால், அதை சீர்குலைத்து நாட்டை துண்டாட சிலர் முயற்சித்து வருகின்றனர். இத்தனை இடையூறுகளுக்கு மத்தியிலும் பீகாரில் சுமூகமாக ஆட்சி செய்து வரும் முதல்வர் நிதீஷ் குமார் அவர்களை பாராட்ட வேண்டும். ஏனென்றால் இதுபோன்ற சமூக விரோதிகளுக்கு எதிராக போராடி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். இது ஒன்றும் சாதாரணமான காரியம் இல்லை என்றார்.