ஜம்மு-காஷ்மீரில் 2-ஆவது நாளாக முழு அடைப்பு
ஜம்மு-காஷ்மீர் குடிமக்களுக்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் சட்டப் பிரிவு 35 ஏ-வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து
ஜம்மு-காஷ்மீர் குடிமக்களுக்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் சட்டப் பிரிவு 35 ஏ-வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாநிலத்தில் 2-ஆவது நாளாக திங்கள்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பிரிவினைவாதத் தலைவர்களால் இந்த முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு ஆதரவளிக்கும் வகையில் வர்த்தக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், மாநில வழக்குரைஞர்கள் சங்க அலுவலகம் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன. போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.
செனாப் பள்ளத்தாக்குப் பகுதியில் ராம்பன், தோடா, கிஷ்த்வர் மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம் பகுதியளவு நடைபெற்றதாகவும், சட்டப்பிரிவு 35 ஏ-வுக்கு ஆதரவாக அமைதியாக பேரணிகள் நடைபெற்றதாகவும் போலீஸார் கூறினர்.
பதற்றம் மிகுந்த பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்ததாகவும், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதுமாக எந்தவொரு அசம்பாவிதச் சம்பவங்களும் நிகழவில்லை என்றும் அவர்கள் கூறினர். எனினும், ஞாயிற்றுக்கிழமை மாலை குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலின்போது கல்வீச்சு சம்பவத்தில் 6 பேர் காயமடைந்தனர்.
அமர்நாத் யாத்திரை பாதிப்பு: இதனிடையே, காஷ்மீரில் முழு அடைப்பு காரணமாக அமர்நாத் புனித யாத்திரை தொடர்ந்து 2-ஆவது நாளாக நிறுத்தப்பட்டது. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.