பாலியல் வன்கொடுமை விவகாரம்: கேரளப் பாதிரியார்கள் சரணடைய கெடு
கேரளாவில் 34 வயதுப் பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பதியப்பட்டுள்ள வழக்கில், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் பாதிரியார்கள் 1 வாரத்துக்குள் சரணடைய வேண்டும்
கேரளாவில் 34 வயதுப் பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பதியப்பட்டுள்ள வழக்கில், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் பாதிரியார்கள் 1 வாரத்துக்குள் சரணடைய வேண்டும் என உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மலங்கரா சிரியன் தேவாலயத்தைச் சேர்ந்த 4 பாதிரியார்கள், தங்களிடம் பாவ மன்னிப்பு கேட்ட திருமணமான பெண் ஒருவரை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதையடுத்து அந்தப் பெண்ணின் கணவர் தேவாலயத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அந்தப் பெண்ணின் புகைப்படத்தைப் பாதிரியார்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிரியார்கள் மீது அப்பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே 2 பாதிரியார்கள் காவல் நிலையத்தில் ஏற்கனவே சரணடைந்த நிலையில், தங்களைக் கைது செய்யத் தடை விதிக்க வேண்டுமென 2 பாதிரியார்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 19-ஆம் தேதி அவர்களைக் கைது செய்யத் தடை விதிக்க மறுத்து விட்டது.
இதனையடுத்து, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவின் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது,மனுதாக்கல் செய்துள்ளோர் காவல் நிலையத்தில் சரணடைந்தால் மட்டுமே, அவர்களுக்குப் பிணையில் வெளிவரத் தேவையான சட்டஉரிமைகள் வழங்கப்படும்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
எனவே இருவரும் வரும் 13-ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.