மூத்த காங்கிரஸ் தலைவர் ஆர்.கே.தவாண் காலமானார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜேந்திர குமார் தவாண், தில்லியில் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 81.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜேந்திர குமார் தவாண், தில்லியில் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 81.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு மிகவும் நெருக்கமானவரும், நம்பிக்கைக்கு உரியவருமான ஆர்.கே. தவாண், நெருக்கடி நிலை காலகட்டத்தில் அவருடன் இணைந்து செயல்பட்டார்.
வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக தில்லியில் உள்ள பி.எல். கபூர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் அவர் உயிரிழந்தார். மத்திய அமைச்சராகவும், பல்வேறு நாடாளுமன்றக் குழுக்களில் உறுப்பினராகவும் தவாண் இருந்துள்ளார்.
வயது முதிர்வு பிரச்னை மட்டுமின்றி புற்றுநோய் மற்றும் சிறுநீரக கோளாறாலும் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவரது உடல் நிலை தொடர்ந்து நலிவுற்றது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தவாணின் மறைவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், தவாணின் மறைவு அதிர்ச்சியையும், சோகத்தையும் அளிக்கிறது. கட்சிப் பணிகளிலும், மத்திய அமைச்சராகவும் அவர் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். அவர் என்றும் நினைவுகூரப்படுவார்' என்று தெரிவித்துள்ளார்.
இந்திரா காந்தியின் தனிச் செயலராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் தவாண்.
அவரைத் தாண்டி எந்த விஷயமும் இந்திராவிடம் செல்ல முடியாது என்று பெயர் எடுத்தவர். இந்திரா மறைவுக்குப் பிறகு ராஜீவ் காந்தி காங்கிரஸுக்கு தலைமை ஏற்ற பிறகு கட்சியில் அவரது முக்கியத்துவம் குறைந்தது. எனினும், சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்சிப் பணிக்கு திரும்பிய தவாண், 1990-ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகவும், 1995-ஆம் ஆண்டு மத்திய வீட்டு வசதித் துறை இணையமைச்சராகவும் பதவி வகித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.