ம.பி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை: உறுதிசெய்தது உயர் நீதிமன்றம்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றவாளிக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை அந்த மாநில உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றவாளிக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை அந்த மாநில உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
அங்குள்ள ஷாதோல் மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றத்துக்காக, ராகுல் செளதா(23) என்பவருக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, மத்தியப் பிரேதச மாநில உயர் நீதிமன்றத்தில் ராகுல் செளதா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஹேமந்த் குப்தா மற்றும் நீதிபதி விஜய் குமார் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. அதனால் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால் மட்டுமே மற்ற குற்றவாளிகளுக்கு அச்சம் ஏற்படும். இத்தகைய குற்றவாளிகளிடம்
மனிதத்தன்மையுடன் நடந்து கொள்வது ஆபத்தாக முடியும்.
பெண் குழந்தைகளுக்கு எதிராக இத்தகைய கொடுமைகளை செய்யும் மிருகங்களுக்கு, மனித நேயம் என்கிற பெயரில் மன்னிப்பு வழங்குவது ஒருபோதும் நடக்காது. இந்த குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்குவது, இவரைப் போல பாலியல் குற்றங்களில் ஈடுபவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்று கூறி கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதிகள் உறுதிசெய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.