முகப்பு
இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பந்த்: கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சியின் ஆதரவு பெற்ற தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்தத்தின் காரணமாக, இயல்பு வாழ்க்கை...

Updated On : 24 ஜனவரி, 2018 at 1:54 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:34 PM

திருவனந்தபுரம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சியின் ஆதரவு பெற்ற தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்தத்தின் காரணமாக, இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. கடந்த ஒரு மாதமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏறுமுகமாக உள்ளதன் காரணமாகி பெட்ரோல் மற்றும்  டீசல் எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதனைக் கண்டிக்கும் விதமாக கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆதரவு பெற்ற தொழிற்சங்கங்கள் புதனன்று வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள இப்போராட்டம், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று பாரதிய மஸ்தூர் சங்கம் அறிவித்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக போராட்டக் கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே.கே.திவாகரன் கூறுகையில், 'பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்வதற்கு, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடற்ற சுதந்திரம் வழங்கியுள்ளது. இதனால், எரிபொருள் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை' என்றார்.

வேலை நிறுத்தம் காரணமாக ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் உட்பட பெரும்பாலான வாகனங்கள் புதனன்று இயக்கப்படவில்லை. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. கேரள மாநில போக்குவரத்து கழக சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அரசு பேருந்துகளும் இயங்கவில்லை. இதனால், பயணிகள் கடும் பாதிப்படைந்தனர். வேலை நிறுத்தம் காரணமாக  இன்று நடைபெற இருந்த தேர்வுகளையும் தள்ளி வைப்பதாக பல்வேறு பல்கலைக்கழங்களும் அறிவித்துள்ளன. 

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் வரும் ஜனவரி 30 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.