அரசியல் கட்சிகள் ஓரணியில் போட்டியா?: தேவெ கௌடா பதில்
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் கட்சிகள், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் கட்சிகள், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஓரணியில் போட்டியிட வாய்ப்பில்லை என்று மஜத தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவே கௌடா தெரிவித்தார்.
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்பு நிகழ்ச்சியில், காங்கிரஸ், தெலுங்கு தேசம், திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக, வரும் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்த 6 கட்சிகளும் ஓரணியில் இணைந்து போட்டியிடலாம் என்று கருத்து நிலவுகிறது.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த குமாரசாமியின் தந்தையும், மஜத தலைவருமான தேவே கௌடாவிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் ஓரணியில் போட்டியிட வேண்டும் என்பது அவசியமில்லை. உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் தலா 40 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து சமாஜவாதியும், பகுஜன் சமாஜூம் ஆலோசனை நடத்தி வருகின்றன.
கர்நாடகத்தில், காங்கிரஸுடன் சில கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், கூட்டணியாக நாங்கள் போட்டியிடவுள்ளோம். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், கர்நாடகத்தில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்று மஜதவும், காங்கிரஸும் முடிவு செய்யவில்லை. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், குமாரசாமியும் கலந்தாலோசனை நடத்தி முடிவெடுப்பார்கள்.
கர்நாடகத்தில் கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜுக்கு ஒரு மக்களவைத் தொகுதியை விட்டுக் கொடுக்க மஜத தயாராக உள்ளது. இதற்குப் பதிலாக, உத்தரப் பிரதேசத்தில் ஒரு தொகுதியை மஜதவுக்கு தர வேண்டும் என்று பகுஜன் சமாஜிடம் கேட்பேன். கேரளத்தில் இடதுசாரி கூட்டணியில் எங்கள் கட்சி ஒரு தொகுதியில் போட்டியிடும்.
வரும் நாள்களில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறேன்.
மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஓரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் பேசி வருகின்றனர். நவம்பர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி, பாஜகவினரை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் சூசகமாக வலியுறுத்தியுள்ளனர். எனவே தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, 3ஆவது அணியை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார் தேவெ கௌடா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.