ஆந்திரம்: பவன் கல்யாண் கட்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒய்.வேணுகோபால ராவ், தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் சேர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒய்.வேணுகோபால ராவ், தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் சேர்ந்துள்ளார்.
பவன் கல்யாண், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, வியாழக்கிழமை விசாகப்பட்டினம் சென்றார். அங்கு அவரைச் சந்தித்த வேணுகோபால ராவ், அவரது கட்சியில் இணைந்தார். கடந்த 2005-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டி மூலம் அறிமுகமான வேணுகோபால ராவ், குறுகிய காலத்தில் 16 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். வேணுகோபால ராவுடன் பி.சி. கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கோனா டாடா ராவ், தொழிலதிபர் கொனதல சீதாராம், கல்வியாளர் மாண்டவா ரவிக்குமார் உள்ளிட்டோரும் ஜன சேனா கட்சியில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் பவன் கல்யாண் பேசியதாவது:
கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தெலுங்கு தேசம்-பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்தேன். அந்த சமயத்தில்தான் ஆந்திர மாநிலம், இரண்டாகப் பிரிக்கப்பட்டதால், கட்சியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தினேன். 2019-ஆம் ஆண்டில் ஆந்திர அரசியலில் ஜன சேனா கட்சி முக்கியப் பங்கு வகிக்கும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில், 175 தொகுதிகளிலும் ஜன சேனா கட்சி போட்டியிடும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.