ரயில் பயணத்தின்போது விபத்து நேரிட்டால் பயணிக்கு இழப்பீடு: உச்ச நீதிமன்றம் உத்தரவு
ரயிலில் ஏறும்போது அல்லது இறங்கும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயமடையும் பயணிக்கு இழப்பீட்டுத் தொகை பெற தகுதி உண்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ரயிலில் ஏறும்போது அல்லது இறங்கும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயமடையும் பயணிக்கு இழப்பீட்டுத் தொகை பெற தகுதி உண்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பயணி ஒருவர், கடந்த 2002-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி, ரயிலில் பயணம் செய்தபோது கூட்ட நெரிசலால் தவறி விழுந்து உயிரிந்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாட்னா உயர் நீதிமன்றம், உயிரிழந்த பயணியின் மனைவிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், ரோஹிண்டன் எஃப் நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:
ரயிலில் ஏறும்போதோ அல்லது இறங்கும்போதோ எதிர்பாராத விதமாக தவறி விழுந்து பயணி காயமடைய நேரிட்டால், இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கு அவருக்கு தகுதி உண்டு. மேலும், பயணி உயிரிழக்க நேரிட்டாலும், அவருடைய குடும்பத்தினர் இழப்பீடு பெற முடியும். இதில், ரயில்வே சட்டத்தின் 124-ஏ (தற்கொலை, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளுதல்) பிரிவு பொருந்தாது.
எனினும், ரயில் நிலைய வளாகத்தில் ஒருவரது உடல் கிடப்பதால் மட்டும், அவருடைய குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட முடியாது. பாதிக்கப்பட்ட பயணி, பயண டிக்கெட் வைத்திருப்பது முதல் விபத்து நேரிட்டதற்கான சூழல் வரை முழுமையாக விசாரிக்கப்படும். அந்த விபத்து, எதிர்பாராத விதமாக நேரிட்டிருக்க வேண்டும். ஒவ்வொரு சம்பவத்திலும் விசாரணையின்போது கிடைக்கும் உண்மைகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.