ராஞ்சி: முன்னாள் அமைச்சர் ஒருவர் தொடர்பான வழக்கில் 'வாட்ஸ் அப் கால்' மூலமாக விசாரணை நடத்தி குற்றப்பதிவு செய்ப்பட்ட விவகாரத்தில், ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் அறிக்கை கோரியுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கொன்றில் ஜார்கண்ட் முன்னாள் அமைச்சர் யோகேந்திர சவ் மற்றும் அவரது மனவியும் சட்டப்பேரவை உறுப்பினருமான நிர்மலா தேவி ஆகிய இருவர் மீதும் வழக்கு போடப்பட்டது.இந்த வழக்கில் இருவரும் ஜாமீன் கோரி விண்ணப்பித்த பொழுது, இருவரும் நீதிமன்ற விசாரணையை மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இருந்து எதிர்கொள்ள வேண்டும்,. வழக்கு விசாரணை தவிர வேறு சமயத்தில் ஜார்கண்ட் மாநிலத்திற்குள் நுழையக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது
அதன்படி இந்த வழக்கானது ஹசாரிபாக் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் இந்த ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதியன்று ஹசாரிபாக் மாவட்ட முதன்மை நீதிபதி, யோகேந்திர சவ் மற்றும் அவரது மனவி நிர்மலா தேவி ஆகிய இருவர் மீதும் குற்றச்சாட்டுகளை 'வாட்ஸ் அப் கால்' மூலமாக மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பதிவு செய்தார். அவர்கள் இருவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த பொழுதும் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு இந்த விவகாரம் எடுத்துச் செல்லப்பட்ட பொழுது, 'எப்படி இப்படி ஒரு நகைப்புக்குரிய விஷயம் இந்தியாவின் நீதிமன்ற நடைமுறைக்குள் அனுமதிக்கப்பட்டது?" என்று கேள்வி எழுப்பியது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தரும்படி ஹசாரிபாக் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஜார்கண்ட் உயர் நீதிமன்ற பதிவாளர் அம்புஜ் நாத் தெரிவித்தார்.
அதேசமயம் இந்த வழக்கினை ஹசாரிபாக்கில் இருந்து தில்லிக்கு மாற்ற வேண்டும் என்ற யோகேந்திர சவ் மற்றும் அவரது மனவி நிர்மலா தேவி ஆகிய இருவரின் கோரிக்கையினை ஏற்று, ஜார்கண்ட் மாநிலத்திற்கு நோட்டீஸ் அனுப்பும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.