யூ ட்யூப் விடியோ பார்த்து தனக்குத் தானே பிரசவம்: இளம்பெண் பரிதாப மரணம்
இணையத்தில் யூ ட்யூப் விடியோ பார்த்து தனக்குத் தானே பிரசவம் பார்த்துக் கொள்ள முயன்ற உத்தரபிரதேச இளம்பெண் ஒருவர் பரிதாப மரணம் அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோரக்பூர்: இணையத்தில் யூ ட்யூப் விடியோ பார்த்து தனக்குத் தானே பிரசவம் பார்த்துக் கொள்ள முயன்ற உத்தரபிரதேச இளம்பெண் ஒருவர் பரிதாப மரணம் அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து தகவல் தெரிவித்த கோரக்பூர் நிலையக் காவல் அதிகாரி ரவி ராய் கூறியதாவது:
உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமாகாத 25 வயது இளம்பெண் ஒருவர் கடந்த நான்கு வருடங்களாக கோரக்பூரில் தங்கி, அரசின் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வந்தார்.
Advertisement
அவர் சமீபத்தில் நானகைந்து நாட்களுக்கு முன்னதாக பிலாந்த்பூர் பகுதியில் புதிதாக அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் ஞாயிறு அன்று அவரது அறைக்கதவின் வழியாக ரத்தம் வழிந்து வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்துத் திறந்தனர்.
உள்ளே அந்த இளம்பெண்ணும் புதிதாகப் பிறந்த அவரது குழநதையும் பிணமாகக் கிடந்துள்ளனர். அருகில் கிடந்த அவரது அலைபேசியில், 'வீட்டில் தனியாக குழந்தை பெற்றுக் கொள்வது எப்படி?' என்னும் தலைப்பிலான விடியோ ஓடிக் கொண்டிருந்துள்ளது.
அவரது அலைபேசியில் கிடைத்த தொடர்பு எண்கள் மூலமாக அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்த பிறகு, உடற்கூறாய்வுக்கு பிறகு திங்களன்று இளம்பெண்ணின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.