முகப்பு
இந்தியா

கோவா அரசு அலுவலங்களில் அக்.2ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குத் தடை!

கோவாவில் அரசு அலுவலங்களில் வருகிற அக்டோபர் 2ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்குத் தடை விதிக்கப்படும் என அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

Updated On : 27 செப்டம்பர் 2019, 5:25 pm IST
பகிர்:

கோவாவில் அரசு அலுவலங்களில் வருகிற அக்டோபர் 2ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்துவதோடு, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு பல்வேறு மாநிலங்கள் தடை விதித்து வருகின்றன. 

இந்த நிலையில்,  கோவாவில் அரசு அலுவலங்களில் வருகிற அக்டோபர் 2ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்குத் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

இது தொடர்பாக அம்மாநில பொது நிர்வாகத் துறை செயலாளர் ஸ்ரீபாத் அர்லேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அரசு அலுவலகங்களில் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், கண்ணாடி, தட்டுகள் போன்றவற்றை பயன்படுத்தத் தடை விதிக்க கோவா அரசு முடிவு செய்துள்ளது. தேசத்தந்தை காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2, 2019 முதல் இது அமலுக்கு வருகிறது. அதன்படி, அலுவலகக் கூட்டங்கள், உணவகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட மாட்டாது. இதற்கு  முதலமைச்சர் பிரமோத் சாவந்தின் ஒப்புதல் அளித்துள்ளார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, கடந்த மாதம் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கும் மசோதா கோவா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் ரூ .2,500 முதல் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.