முகப்பு
இந்தியா

ஆப்கனில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதற்கே முன்னுரிமை: அமைச்சர் ஜெய்சங்கர்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக நாடு திரும்பச் செய்வதற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
கோப்புப்படம்
பகிர்:

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக நாடு திரும்பச் செய்வதற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். 

இதுகுறித்து ஐ.நா. மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் விவாதித்து வருவதாகவும் அவர் கூறினார். 

தில்லியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப வேண்டும். அதில் மட்டுமே எங்களின் கவனம் உள்ளது. 

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோருடன் பேசும்போதும் இதுதான் வலியுறுத்தப்பட்டது. 

மற்றவர்களைப் போல நாங்களும் ஆப்கானிஸ்தானின் நிலையை உன்னிப்புடன் கவனித்து வருகிறோம். கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் இந்தியா கணிசமான முதலீடுகளை செய்துள்ளது. இது ஆப்கானிஸ்தான் மக்களுடன் நம்முடைய வரலாற்று உறவைப் பிரதிபலிக்கிறது. 

ஆப்கானிய மக்களுடனான உறவு வெளிப்படையாகத் தொடரும் என்றே நான் நினைக்கிறேன். அது தலிபான்களின் நடவடிக்கையைப் பொருத்தது. காபூலில் நிலைமை என்னவென்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார். 

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதற்கு பாகிஸ்தான் காரணமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.