இந்தியா

ஆறுமுகசாமி ஆணைய விவகாரம்: அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வாதம்

தினமணி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
 தமிழக முதல்வராக இருந்தபோது உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 2016, டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார்.
 அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அப்போதைய மாநில அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை 2017, செப்டம்பரில் நியமித்திருந்தது. இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆணையத்தின் விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
 இதைத் தொடர்ந்து, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் 2019-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
 இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குத் இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கக் கோரி தமிழக அரசின் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீர், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 அப்போது, அப்பல்லோ மருத்துவமனையின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.ஏ.சுந்தரம், வழக்குரைஞர் ரோஹிணி மூஸா ஆகியோர் ஆஜராகினர். இதில் சி.ஏ.சுந்தரம் முன்வைத்த வாதம்:
 இந்த ஆணையத்தின் செயல்பாட்டில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதன் செயல்பாடு ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. மேலும், ஆணையத்தில் மருத்துவ வல்லுநர்கள் இடம்பெறவில்லை. மருத்துவர்கள் தெரிவிக்கும் சில விவரங்களை ஆணையத்தால் புரிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது.
 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தங்கியிருந்த தளத்தில் பொருத்தப்பட்ட கேமராக்கள் அப்போதைய அரசின் அறிவுறுத்தலின் பேரிலேயே அகற்றப்பட்டன. மேலும், அவரது மரணத்துக்குப் பிறகு இந்த ஆணையம் தாமதமாகவே அமைக்கப்பட்டுள்ளது.
 அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அந்த சிகிச்சையின் தரம் குறித்தும் கேள்வி எழுப்பும் தேவையும் எழவில்லை. இந்த விவகாரத்தைப் பொருத்தமட்டில் எந்த நீதிமன்றத்திடமும் ஒத்துழைப்பு அளிக்க மருத்துவமனை நிர்வாகம் தயாராக உள்ளது என்றார். இதன் பிறகு வாதத்தைத் தொடரும் வகையில், வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (அக். 27) பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே, வழக்குரைஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ரஞ்சித் குமார் ஆகியோர் ஆஜராகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்ச்சில் சரிவைக் கண்ட தொழிலக உற்பத்தி

விளையாட்டு விடுதி மாணவா்கள் சோ்க்கைக்கு தோ்வுப் போட்டிகள்

மன நல மையத்தில் சிகிச்சை பெற்றவா் தற்கொலை

மதுரை ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைவது எப்போது?

செவிலியா்களின் சேவைக்கு ஈடு இணை இல்லை

SCROLL FOR NEXT