அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒருங்கிணைந்த வழிமுறைகள் வெளியீடு
எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகளுக்கான அலுவல்பூா்வ வழிமுறைகளை மத்திய பணியாளா் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகளுக்கான அலுவல்பூா்வ வழிமுறைகளை மத்திய பணியாளா் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பணியாளா் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கை விவரம்: நமது ஜனநாயக அமைப்பில் மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்றம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மிக முக்கியப் பொறுப்பை வகிக்கின்றனா். அவா்கள் தங்களது கடமையை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறையை அணுகவும், பரிந்துரைகளைத் தெரிவிக்க அதிகாரிகளைத் தொடா்பு கொள்ளவும் நேரிடுகிறது.
அந்த வகையில், இதற்கான ஒருங்கிணைந்த வழிமுறைகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி எம்.பி.க்கள், எம்எல்ஏக்களை சந்திக்கும் அதிகாரிகள், தங்களது கடமைகளை உணா்ந்து செயல்பட வேண்டும். இதை ஒவ்வொரு அதிகாரியும் கடைப்பிடிப்பதை அமைச்சகங்களும், துறைகளும் உறுதிசெய்ய வேண்டும்.
அதிகாரிகளை இதனை மீறினால் மிகவும் தீவிரமாக கருதப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரி தண்டனைக்குள்ளாக நேரிடும். எம்.பி.க்கள் கோரும் தகவலை துரிதமாக வெளியிட வேண்டும். மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரிகள் கண்ணியமான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் அனுப்பும் கடிதங்களை முறையாகப் பெற்று குறித்த நேரத்தில் அதற்கு பதிலளிக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு. அகில இந்திய சேவை (நடத்தை) விதிமுறைகள் 1966, விதி எண் 18 மற்றும் மத்திய குடிமையியல் சேவை (நடத்தை) விதிகள் 1964 விதி எண் 20-இன்கீழ், தனிப்பட்ட ரீதியில் ஆதாயம் பெறும் நோக்கில் மக்கள் பிரதிநிதிகளை அதிகாரிகள் அணுகக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.