முகப்பு
இந்தியா

பாஜக அரசு ஊழலின் சின்னமாக திகழ்கிறது: கமல்நாத் விமர்சனம்!

பணவீக்கம் மற்றும் ஊழலின் சின்னமாக பாஜக அரசு திகழ்ந்து வருவதாக மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் விமர்சனம் செய்துள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:18 AM
பகிர்:

மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத், பாஜக அரசானது பணவீக்கம் மற்றும் ஊழலின் சின்னமாக திகழ்ந்து வருவதாக விமர்சனம் செய்தார். 

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சிந்த்வாரா சட்டமன்றத் தொகுதியில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கமல்நாத் இதனைத் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கமல்நாத் பேசியதாவது: “மத்திய பிரதேசம் ஊழல் மாநிலமாக மாறிவிட்டது. இன்று மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் ஊழலுக்கு பலியாகி வருகின்றனர். 

நவம்பர் 17-ஆம் தேதி நடைபெறும் தேர்தல் எந்தவொரு வேட்பாளருக்கோ அல்லது கட்சிக்கானதோ அல்ல. இது மத்திய பிரதேசத்தின் எதிர்காலத்திற்கானது. 

சிவராஜ் சிங் தலைமையிலான பாஜக ஆட்சியில் மத்தியப் பிரதேசத்தின் சுகாதாரக் கட்டமைப்பு, கல்வி முறை, விவசாயம், தொழில்கள், ரேஷன் முறை மற்றும் ஊட்டச்சத்து அமைப்பு என அனைத்து துறைகளும் மோசமாக சிதைக்கப்பட்டுள்ளன. இந்த உண்மை மத்திய பிரதேசத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

முதல்வர் சிவராஜ் சிங் சவுகானோ அல்லது அவரது தலைவர்களோ வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகளைப் பற்றி பேசுவதே இல்லை. 

பாஜக அரசு பணவீக்கம் மற்றும் ஊழலின் சின்னமாக திகழ்ந்து வருகிறது. பாஜகவினரின் வாய் மட்டும்தான் வேலை செய்கிறது. வாயால் பேசுவதற்கும், ஒரு அரசை நடத்துவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

பாஜக அரசை தூக்கி எறிவதற்கான நேரம் வந்துவிட்டது. இன்னும் சில நாட்களில் பாஜக ஆட்சி அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்” என்று கமல்நாத் பேசினார்.

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர் 17-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறும்.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 114 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சியமைத்தது. பாஜக 109 தொகுதிகளில் மட்டும் வெற்றியடைந்தது. அதன்பின் சில எம்.எல்.ஏ.க்கள் பாஜகவிற்கு வந்தநிலையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.  

முழு கட்டுரையைப் படிக்க →