முகப்பு
இந்தியா

காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு!

கடல் அரிப்பு, உலக வெப்பமயமாதல் மற்றும் கடல் நீர்மட்டம் அதிகரிப்பு போன்றவை ஆந்திர மாநில கடற்கரைப் பகுதிகளை வெகுவாகத் தாக்கத்தொடங்கியிருக்கிறது.

Updated On : 2 மார்ச், 2023 at 4:07 PM
காணாமல் போகும் கடற்கரைகள்: பேராசைக்குக் கிடைக்கும் பரிசு!
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:08 PM

விசாகப்பட்டினம்: கடல் அரிப்பு, உலக வெப்பமயமாதல் மற்றும் கடல் நீர்மட்டம் அதிகரிப்பு போன்றவை ஆந்திர மாநில கடற்கரைப் பகுதிகளை வெகுவாகத் தாக்கத்தொடங்கியிருக்கிறது.

வடக்கே ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள இச்சாபுரத்திலிருந்து தெற்கே நெல்லூர் மாவட்டத்தில் உள்ள தடா வரை நீண்டிருக்கும், 974 கிலோமீட்டர் நீளமுள்ள நாட்டிலேயே இரண்டாவது மிக நீளமான கடற்கரை. 

தேசிய கடற்கரை ஆய்வு மையம் வெளியிட்ட ஆந்திர மாநில கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்ட மாற்றம் குறித்த நிலை என்ற ஆய்வறிக்கை 28.7 சதவிகித கடற்கரைகள் அரிக்கப்பட்டுவருகின்றன.  21.7 சதவிகித கடற்கரைகள் நிலையாக உள்ளன. 49.6 சதவிகிதம் அதிகரித்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதற்கான காரணங்களை அறிவியல்பூர்வமாகவும், புவியியல் ரீதியாகவும் கூறினால் வேறுவிதமாக இருக்கும். ஆனால், இதற்கு முக்கிய காரணம் மனித பேராசை மற்றும் இயற்கை சீற்றமே எனலாம்.

அலைகளின் சீற்றம், உலக வெப்பமயமாதல், கடல் நீர் மட்டம் உயர்வு, பனிப்பாறைகள் வேகமாக உருகுதல், புயல்கள் மற்றும் மனிதனின் பேராசை காரணமாக செய்யப்படும் கட்டுமானங்கள் மற்றும் வனப்பகுதிகளை அழிப்பது போன்றவை இதற்கான முக்கியக் காரணங்கள்.

உப்படா, விசாகப்பட்டினம், மச்சிலிப்பட்டினம், கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களில் டெல்டா பகுதிகள், கிருஷ்ணபட்டினம் பகுதிகளில் கடல் அரிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

புயல் மற்றும் சூறாவளியின் போது வேகமாக அடிக்கும் அலை காரணமாக கடல் அரிப்பு அதிகரிக்கிறது. அதற்கு உதவும் வகையில், நகரமயமாதல் மற்றும் தொழிற்சாலைகள் அமைத்தல் அனைத்தும் அதுவும் கடற்கரையை ஒட்டி சில தொழிற்சாலைகளை அமைக்கும் போது, அது இயற்கையான மண் வளத்தை மாற்றிவிடுகிறது. இதனால், கடல் அரிப்பை அங்கு தடுக்க முடியாமல் போய்விடுகறிது.

கடலையொட்டி வண்டல் மண் வெளியேறும்போது இது மேலும் அதிகரிக்கிறது. துறைமுகங்கள் அமைத்தல், தொழிற்சாலைகளிலிருந்து தண்ணீரை வெளியேற்ற வழிவகை செய்தல் போன்றவை கடலின் தன்மையை மாற்றுகிறது. இது கடல் அரிப்புக்கு கூடுதலாக உதவுகிறது.

காக்கிநாடா மாவட்டம் உப்படா பகுதி கடல் அரிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. ஓராண்டுக்கு 1.23 மீட்டர் நிலப்பகுதி கடலால் அரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. கடல்அரிப்பிலிருந்து நிரந்தர தீர்வைக் காண ஏராளமான கிராமங்கள் கடற்கரையோரம் காத்திருக்கின்றன. ஆனால், அதுவரை கடல் அரிப்பு காத்திருக்குமா என்று தெரியவரவில்லை.

பல சமயங்களில் அதிக அலை எழுந்து தங்கள் வீடுகளை கடல் அலை அடித்துக் கொண்டு செல்லும் போது, வெறுங்கையோடு வேறு இடங்களுக்கு இடம்பெயரும் நிலையில்தான் உள்ளனர் இந்த  கிராம மக்கள்.

தங்களது எதிர்காலம் பற்றிய ஆயிரம் கேள்விகளுடன் பலரும் இப்பகுதிகளில் அச்சத்தோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆந்திர பல்கலைக்கழகத்தின் வானிலை மற்றும் கடல்சார் துறையின் தலைவர் டாக்டர் பி சுனிதா கூறும்போது, ​​“கடலோர மண்டல மேலாண்மை (CZM) நடைமுறைகளை புறக்கணித்து, வளர்ச்சி, தொழில்துறை மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக கடற்கரைகளில் பல்வேறு கட்டுமானங்களை எடுத்து வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் சதுப்புநில காடுகளை அழிப்பதும், தொழிற்சாலைகளின் நச்சுக் கழிவுகளால் கடல் மாசுபடுவதும் இதற்கு மற்ற முக்கிய காரணிகளாகும். இதை கட்டுப்படுத்த, நாம் கடலோர மண்டல மேலாண்மை செயல்முறைகள், கடற்கரை ஊட்டச்சத்து, கடல் சுவர்கள் மற்றும் க்ரோயின்கள் கட்டுமானம் மற்றும் கடலோர பகுதிகளில் காடு வளர்ப்பு ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். கடலோர அரிப்பு, புவி வெப்பமடைதல் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை தீவிரமானவை. அவற்றை மிகக் கவனத்தோடு பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.