யுபிஎஸ்சியில் நேரடிச் சேர்க்கை நியமன முறைக்கு மத்திய அமைச்சர் எதிர்ப்பு!
உயா்பதவிகளில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதில் தனியாா் துறைகளைச் சோ்ந்த வல்லுநா்களை நேரடி நியமனம்...
மத்திய அமைச்சகங்களில் காலியாக உள்ள உயா்பதவிகளில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதில் தனியாா் துறைகளைச் சோ்ந்த வல்லுநா்களை நேரடி நியமனம் (லேட்டரல் என்ட்ரி) செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.
இந்த நிலையில், ராகுல் காந்தியை தொடர்ந்து மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானும் யுபிஎஸ்சியில் நேரடிச் சேர்க்கை நியமன முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை(ஆக. 19) அவர் கூறியிருப்பதாவது, “அரசுப் பணி நியமனங்களில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ள முறை கவனிக்கத்தக்கது. நானும் இந்த அரசின் ஓர் அங்கமாக திகழ்கிறேன். எனவே, இதுபோன்ற சர்ச்சைகள் குறித்து கேள்வி எழுப்புவேன். எங்கள் கட்சி தரப்பில் இந்த நடைமுறைக்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இது முழுக்க முழுக்க தவறான நடைமுறை. அரசுக்கு இந்த விவகாரத்தை கொண்டு செல்வேன்” என்று பேசியுள்ளார்.
Advertisement
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹாஜிபூர் எம்.பி. - லோக் ஜனசக்தி கட்சி(ராம் விலாஸ் பஸ்வான் அணி) தலைவர் சிராக் பாஸ்வான் மத்திய அமைச்சரவையில் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.