சண்டிகரைச் சேர்ந்த நிறுவனத்தால் அனைத்து நிலப்பரப்புகளிலும் செல்லும் வகையிலான நான்கு சக்கர வாகனங்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு இந்திய ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
எஸ்எம்வி என்1200 அடோர் எனப்படும் இந்த சிறப்பு இயக்க வாகனங்கள் ஜேஎஸ்டபிள்யூ ஜெக்கோ நிறுவனத்தால் சண்டிகரில் தயாரிக்கப்பட்டு இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்காக 96 வாகனங்கள் வழங்கப்பட்டுளன.
புதிய சிறப்பு வாகனங்களை இந்த ஆண்டின் குடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவத்தால் காட்சிப்படுத்தப்பட்டது.
உலகில் முதன்முதலாக பாதுகாப்புப் படையினருக்கு அடர்ந்த காடுகள், பாலைவனம், உறுதியற்ற நிலங்கள், கற்களாலான பாதைகள், சதுப்பு நிலங்கள், பனி படர்ந்த நிலங்கள், ஏரி அல்லது நதிகளில் கூட பயன்படுத்தும்படியாக இந்த வாகனம் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேஎஸ்டபிள்யூ ஜெக்கோ நிறுவனத்தின் இயக்குநர் ஜாஸ்க்ரீட் சிங் நாக்ரா இந்த வாகனங்கள் தயாரிப்பு குறித்துப் பேசுகையில், “கடந்த 2021 ஜூலையில், இந்திய இராணுவம் எஸ்எம்வி என்1200 அடோர் வாகனத்தை கடுமையான நிலப்பரப்புகளிலும் பல சவாலான சூழல்களிலும் சோதனை ஓட்டங்களை நடத்தியது.
அதே நேரத்தில், ஜேஎஸ்டபிள்யூ ஜெக்கோ மோட்டார்ஸ், எஸ்எம்வி வாகனங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை உள்ளூர் முறையில் தயாரிக்க கொபாடோ நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டது. எனவே, இந்த வாகனங்கள் மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யும் விதமாக உறுதி செய்யப்பட்டது” எனக் கூறினார்.
மேலும், ”ஜூன் 2023ல், இந்திய இராணுவத்தின் பல்வேறு செயல்பாடுகளுக்குப் பயன்படுத்த 96 எஸ்எம்விகளைத் தயாரிக்க ஒப்பந்தம் பெற்றோம். சண்டிகரில் இதற்கென ஒரு நவீன உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டு, முழுமையான உற்பத்தி ஜனவரி 2024ல் துவங்கியது.
இதன் மூலம் 96 வாகனங்களை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இராணுவத்திற்கு வெற்றிகரமாக வழங்கியுள்ளோம், இதனால் உலகில் முதன்முதலாக இந்த மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட வாகனங்களை இந்திய இராணுவம் இயக்குகிறது. தற்போது இதே வாகனங்களையும் மற்றும் இதே போன்ற தொழில்நுட்பத்தாலான மற்ற வாகனங்களையும் எல்லை பாதுகாப்பு படை, இந்திய-திபெத்திய எல்லை போலீஸ், அசாம் ரைஃபிள்ஸ், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் பிற பாதுகாப்புப் படைகளுக்கு தயாரித்து வழங்க இருக்கிறோம்'' என்று நாக்ரா தெரிவித்துள்ளார்.
எஸ்எம்வி என்1200 அடோர் வாகனம் பல்வேறு சூழ்நிலைகளில் பயன்படுத்தவும் பாதுகாப்பை மேம்படுத்தவும் தனித் திறன்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மிகவும் சவாலான நிலப்பரப்புகளில் கூட சிறப்பான செயல்பாட்டை வழங்குவதாகவும், நீரில் பயணம் செய்து பின்னர் எளிதாக நிலத்திற்குத் திரும்பும் திறனையும் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த வாகனங்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காகவும், மருத்துவ உதவி, கட்டளை மையப் பணிகள், இயற்கைப் பேரிடர் உதவிப் பணிகள் போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டினைப் பொருத்து மேலும் பல வாகனங்கள் ராணுவ பயன்பாட்டிற்கு வாங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.