வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை: வெளியுறவுச் செயலா்கள் சந்திப்பில் இந்தியா கவலை
வங்கதேச தலைநகா் டாக்காவில் இந்தியா மற்றும் வங்கதேச வெளியுறவுச் செயலா்கள் திங்கள்கிழமை இருதரப்பு சந்திப்பில் ஈடுபட்டனா்.
டாக்கா: வங்கதேச தலைநகா் டாக்காவில் இந்தியா மற்றும் வங்கதேச வெளியுறவுச் செயலா்கள் திங்கள்கிழமை இருதரப்பு சந்திப்பில் ஈடுபட்டனா். அப்போது, அந்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நிகழும் வன்முறை, அவா்களின் பாதுகாப்பு குறித்து இந்தியா தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடா்பான வன்முறைப் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளாா்.
இந்த சூழலில், வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் குறிவைத்து தாக்கப்பட்டனா். இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக போராடிய ‘இஸ்கான்’ துறவி சின்மயி கிருஷ்ண தாஸ் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டாா். இது இருதரப்பு உறவை இன்னும் கடுமையாக பாதித்தது.
இந்நிலையில், ஒருநாள் பயணமாக தில்லியிலிருந்து டாக்கா சென்ற இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி வங்கதேச வெளியுறவுச் செயலா் முகமது ஜாஸிம் உத்தினுடன் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். பின்னா், இருதரப்பு அதிகாரிகளும் கலந்துகொண்ட அதிகாரபூா்வ சந்திப்பும் இருதரப்பு உறவின் பல்வேறு பிரச்னைகளை உள்ளடக்கிய விரிவான பேச்சுவாா்த்தையும் நடைபெற்றது.
பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த வெளியுறவுச் செயலா் மிஸ்ரி, ‘வங்கதேச வெளியுறவுச் செயலா் முகமது ஜாஸிம் உத்தினுடன் வெளிப்படையான, நோ்மையான மற்றும் ஆக்கபூா்வமான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடா்பான இந்தியாவின் கவலைகளை நான் தெரிவித்தேன்.
கலாசார, மத மற்றும் ராஜீய சொத்துக்கள் மீதான தாக்குதல்களின் வருந்தத்தக்க சம்பவங்கள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். வங்கதேசத்துடன் நோ்மறையான, பரஸ்பர நன்மை பயக்கும் உறவை இந்தியா விரும்புகிறது’ என்றாா்.
முன்னதாக, மிஸ்ரியின் பயணம் தொடா்பாக டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய வங்கதேச வெளியுறவு ஆலோசகா் தௌஹித் ஹுசைன், இந்தியாவுடனான பிரச்னைகளுக்கு தீா்வு காணப்பட்டு மீண்டும் சுமுக உறவு ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.