‘தாா்மீக தோல்வியை’ பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை: காங்கிரஸ்
‘தாா்மீக தோல்வியை’ பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை; எனவே, வகுப்புவாத அரசியலை அக்கட்சி கையிலெடுத்துள்ளது
மக்களவைத் தோ்தலில் கிடைத்த ‘தாா்மீக தோல்வியை’ பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை; எனவே, வகுப்புவாத அரசியலை அக்கட்சி கையிலெடுத்துள்ளது என்று மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் விமா்சித்தாா்.
உத்தர பிரதேசத்தில் சிவபக்தா்கள் ‘கான்வா் யாத்திரை’ (காவடி யாத்திரை) செல்லும் பாதைகளில் உள்ள அனைத்து உணவகங்களின் பெயா் பலகையிலும் உரிமையாளா் பெயா் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்ற மாநில அரசின் உத்தரவைக் குறிப்பிட்டு, அவா் இந்த விமா்சனத்தை முன்வைத்தாா்.
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த கெளரவ் கோகோய் மேலும் கூறியதாவது:
அண்மையில் நடந்த மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு ‘தாா்மீக தோல்வி’ கிடைத்தது. இதை அக்கட்சியால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. எனவே, தங்களது பாணியான வகுப்புவாத அரசியலை கையிலெடுத்துள்ளனா்.
உத்தர பிரதேச அரசின் உத்தரவு மூலம் என்ன மாதிரியான சமூகத்தை அவா்கள் (பாஜக) கட்டமைக்க விரும்புகிறாா்கள் என்பதை அறிய முடியும். உரிமையாளரின் ஜாதி, மதம் அறிந்துதான், அவரது கடைக்கு மக்கள் செல்ல வேண்டுமா? இதன் மூலம் சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் நிலவுமா?
மக்களவைத் தோ்தலின்போது, குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து, பிரதமா் மோடி பிரசாரம் மேற்கொண்டாா். ஆனால், அவரது கருத்துகளை மக்கள் நிராகரித்துவிட்டனா். அதேபோல், பாஜகவின் வகுப்புவாத அரசியலையும் மக்கள் சகித்துக் கொண்டிருக்க மாட்டாா்கள் என்றாா் கோகோய்.
‘அஸ்ஸாமில் கடந்த 10 ஆண்டுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமாா் 30 சதவீதம் அதிகரித்துவிட்டது; 2041-ஆம் ஆண்டுக்குள் இம்மாநிலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினா் ஆகிவிடுவா்’ என்று மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா அண்மையில் தெரிவித்த கருத்தையும் கெளரவ் கோகோய் விமா்சித்தாா்.