சிறார்களின் ஆபாசப் படங்களைப் பார்ப்பது குற்றம்: கர்நாடக உயர்நீதிமன்றம்!
சிறார்களின் ஆபாசப் படங்களைப் பார்ப்பது குற்றமாகக் கருதப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
சிறார்களின் ஆபாசப்படங்களைப் பார்ப்பது குற்றமாகாது என்ற உத்தரவை திரும்பப்பெற்ற கர்நாடக உயர்நீதிமன்றம் அவற்றைப் பார்ப்பது குற்றம் என்றும், அதனைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் இனாயத்துல்லா என்பவர் மீது சிறார் ஆபாசப் படங்களைப் பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67 பி-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அவர் ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தில் சுமார் 50 நிமிடங்களுக்கு சிறார் ஆபாசப் படங்களைப் பார்க்க மட்டுமே செய்ததாகவும், அதனை யாருக்கும் பரப்பவில்லை என்றும் அவர் தரப்பில் கூறப்பட்டது.
Advertisement
Advertisement
பிரிவு 67 பி-ன் கீழ் சிறார் ஆபாசப் படங்களை தயாரிப்பது மற்றும் பரப்புவது ஆகியவை குற்றம் என்று குறிப்பிடப்படுகிறது. எனவே, சிறார் ஆபாசப்படங்களைப் பார்ப்பது குற்றமல்ல என்று கர்நாடக நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வழக்கு அரசு சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, கடந்த வெள்ளியன்று (ஜூலை 19) தனிநபர் அமர்வான நீதிபதி நாகபிரசன்னாவிடம் மறு விசாரணைக்கு வந்தது.
மறு விசாரணையில் இந்த வழக்கில் வழங்கப்பட்டத் தீர்ப்பில், தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு 67பி- ன் துணைப்பிரிவு ‘பி’-யைத் தவறுதலாகக் கவனிக்காமல் விட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அதில், “குழந்தைகளைப் பாலியல் ரீதியான முறையில் ஆபாசமாக (அ) அநாகரிகமாக சித்தரிக்கும் விடியோக்கள் மற்றும் படங்களை உருவாக்குவது, சேகரிப்பது, தேடுவது, பரப்புவது, பதிவிறக்குவது, விளம்பரப்படுத்துவது ஆகியவை குற்றமாகக் கருதப்படும்” என்று குறிப்பிட்ட உயர்நீதிமன்றம் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
”நீதிபதிகள் தவறாகத் தீர்ப்பு வழங்கியிருந்தால் அதனைத் திருத்தும் வாய்ப்பு உள்ளது. முன்னதாக வெளியான உத்தரவில் தவறு இருப்பதாக தெரிந்தும் அதனை நிலைநாட்டுவது சரியாக இருக்காது” என்று அந்த உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.