ஒடிசா முதல்வராவார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை: மோகன் சரண் மனைவி
மக்களுக்காக நிச்சயம் பாடுபடுவார் என்று தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் அவரது மனைவி நம்பிக்கை.
ஒடிஸாவின் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜீ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
மத்திய அமைச்சர்கள் தலைமையில் ஒடிஸா பாஜக எம்எல்ஏ-க்களின் கூட்டம் புவனேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வராக மோகன் சரண் மாஜீ ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்ட மோகனின் மனைவி பிரியங்கா கூறுகையில்,
புவனேஸ்வரில் உள்ள அரசு குடியிருப்பில் மோகனின் தாய் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகின்றோம். புதிய முதல்வராக மாஜீ அறிவிக்கப்பட்டபோது நாங்கள் அனைவரும் ஆச்சரியத்தில் திளைத்தோம்.
உள்ளூர் செய்தியின் மூலம் முதல்வராக பதவி உயர்த்தப்பட்டதைப் பற்றி நாங்கள் தெரிந்துகொண்டோம். அந்த நிமிடம் வரை முதல்வராவர் என நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. புதிய பாஜக அமைச்சரவையில் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்.
இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தனது கணவர் மாநில மக்களுக்கும், தனது சொந்த தொகுதியான கியோஞ்சார் மக்களுக்கும் நிச்சயம் பாடுபடுவார் என்று தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மோகனின் தாயார் பலே மாஜி கூறுகையில்,
தனது மகன் முதல்வரானதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இளைஞராக இருந்தபோதே மக்களுக்குச் சேவை செய்ய முன்வந்தார். முதலில் கிராம தலைவரானார். பின்னர் எம்எல்ஏவானார். தற்போது முதல்வராக உயர்ந்துள்ளார் என்று அவர் கூறினார். எனது தந்தை முதல்வரானது எனக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது என அவரது மகன் தெரிவித்தார்.
முதல்வராக மாஜீயின் பெயர் அறிவிக்கப்பட்டதையடுத்து, கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான ராய்காலாவில் மக்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.