ஜனநாயகத்தை, அரசியலமைப்பை காப்பதற்கான தேர்தல்!
ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பதற்கான தேர்தல் இது என்றார் மல்லிகார்ஜுன கார்கே
நடப்பாண்டு மக்களவைத் தேர்தல் என்பது ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பதற்கான தேர்தல் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறையினர் கைது செய்ததைக் கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தில்லி ராம்லீலா திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆர்.எஸ்.எஸ். - பாஜக இணைந்து நாட்டை சீரழித்து வருகிறது. எதிர்க்கட்சிகள் அனைவரும் இணைந்து ஆளும் பாஜகவை தோல்வியுறச்செய்ய வேண்டும். இது ஜனநாயகத்தை காப்பதற்காக தேர்தல்.
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதன் மூலம் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனை இந்தியா கூட்டணியின் போராட்டம் எடுத்துக்காட்டும்.
நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும். அதன்மூலம் மட்டுமே பாஜகவை தோல்வியுறச் செய்ய முடியும் எனக் கூறினார்.