மாநிலங்களவையில் கார்கே - நட்டா இடையே வாக்குவாதம்!
மாநிலங்களவையில் கார்கே - நட்டா இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பற்றி...
மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சீன எல்லைப் பிரச்னை குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
இந்த நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன், மக்களவையில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காதது குறித்து மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.
“நாடாளுமன்றம் என்றால் மாநிலங்களவையும், மக்களவையும் சேர்ந்ததுதான். மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் நாட்டின் நலன்கள் குறித்துப் பேச விரும்பினார், ஆனால் அவருக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் அவையை எப்படி நடத்த முடியும்?” எனக் கேட்டார்.
இதற்கு பதிலளித்த ஜெ.பி. நட்டா, ”மக்களவையின் நடவடிக்கைகளை மாநிலங்களவையில் விவாதிக்க முடியாது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.