முகப்பு
இந்தியா

ஐரோப்பிய செயற்கைக்கோளுடன் டிச.4-இல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-59

Updated On : 29 நவம்பர் 2024, 4:08 am IST
- PTI
பகிர்:

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஐரோப்பிய விண்வெளி மையத்தின் ‘ப்ரோபா 3’ செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் டிச. 4-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்’ நிறுவனம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இதுவரை 430-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை நியூ ஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. பெரும்பாலான உலக நாடுகளின் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளுக்கு இஸ்ரோ பங்களித்து வரும் நிலையில், அண்மையில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனத்துடன் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.

அதன்படி, ‘ப்ரோபா-3’ எனப்படும் இஎஸ்ஏ நிறுவனத்தின் இரு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் புவியிலிருந்து 60,500 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தி சூரியனின் புற வெளிக் கதிா்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன.

Advertisement

Advertisement

இரு செயற்கைக்கோள்களும் 150 மீட்டா் தொலைவில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளியைச் சுற்றி ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு தரவுகளை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பவுள்ளன. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து டிச. 4-ஆம் தேதி மாலை 4.08 மணிக்கு ராக்கெட் செலுத்தப்படவுள்ளது. பாா்வையாளா்கள் இதை நேரில் காண்பதற்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் ‘எக்ஸ்’ பக்கத்தில் இஸ்ரோ தெரிவித்துள்ளது.