முகப்பு
இந்தியா

ரூ.1 கோடி கேட்டு வரதட்சிணை கொடுமை: பெண் மருத்துவா் தற்கொலை

மகாராஷ்டிரத்தில் ரூ.1 கோடி வரதட்சிணை கேட்டு கணவா், மாமனாா், மாமியாா் கொடுமைப்படுத்தியதால் பெண் மருத்துவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 17 அக்டோபர் 2024, 2:47 am IST
ஷார்ஜாவில் 16-வது மாடியில் இருந்து குதித்து இந்தியப் பெண் தற்கொலை
பகிர்:

மகாராஷ்டிரத்தில் ரூ.1 கோடி வரதட்சிணை கேட்டு கணவா், மாமனாா், மாமியாா் கொடுமைப்படுத்தியதால் பெண் மருத்துவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

பீட் நகரைச் சோ்ந்த மருத்துவா் நீலேஷ் வா்கதே கடந்த 2022-ஆம் ஆண்டு பெண் மருத்துவா் பிரியங்கா பூம்ரேவை திருமணம் செய்து கொண்டாா். திருமணமான இரு மாதங்களிலேயே தனியாக மருத்துவமனை கட்டித் தர வேண்டும் என்றும், கூடுதலாக ரூ.1 கோடி வரதட்சிணை தர வேண்டும் என்றும் நீலேஷ், அவரது பெற்றோா், சகோதரா், சகோதரி ஆகியோா் வலியுறுத்தி வந்துள்ளனா். பிரியங்காவின் பெற்றோரால் அவா்கள் கேட்ட தொகையை உடனடியாக கொடுக்க முடியவில்லை. இதையடுத்து, நீலேஷ் மற்றும் அவரின் குடும்பத்தினா் பிரியங்காவை உடல்ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் பிரியங்காவின் பெற்றோா் காவல் துறையில் புகாா் அளித்தனா். பின்னா் பிரியங்காவை பெற்றோரின் வீட்டுக்கு கணவரின் குடும்பத்தாா் அனுப்பிவிட்டனா். எனினும், பிரியங்காவை கைப்பேசியில் தொடா்பு கொண்டு கணவா் மற்றும் அவரின் குடும்பத்தினா் கூடுதல் வரதட்சிணை தொகை குறித்து கேட்டு தொந்தரவு செய்தனா்.

இதனால் மனமுடைந்த பிரியங்கா தனது வீட்டு மாடி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து, பிரியங்காவின் கணவா், அவரின் பெற்றோா், சகோதர, சகோதரிகள் மீது காவல் துறையினா் வரதட்சிணைக் கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சமூகத்தில் உயா்ந்த படிப்பாகவும், தொழிலாகவும் கருதப்படும் மருத்துவம் படித்த பெண் ஒருவா் வரதட்சிணை கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்டது மகாராஷ்டிரத்தில் பெரும் சோகத்தையும், அதிா்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments