முகப்பு
இந்தியா

விமான ஓடுதளத்தில் சாப்பிட்ட பயணிகள்: இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.20 கோடி அபராதம்!

மும்பை விமான நிலைய ஓடுதளத்தில், விமான பயணிகள் அமர்ந்து சாப்பிட்ட சம்பவம் தொடர்பாக இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:18 PM
படங்கள்: எக்ஸ்
பகிர்:

மும்பை விமான நிலைய ஓடுதளத்தில், விமான பயணிகள் அமர்ந்து சாப்பிட்ட சம்பவம் தொடர்பாக இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விதிமீறல் தொடர்பாக இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனங்கள், மும்பை சர்வதேச விமானநிலைய நிறுவனம் (எம்ஐஏஎல்) ஆகியவற்றுக்கு விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பும் (பிசிஏஎஸ்) விமான போக்குவரத்து இயக்குநரகமும் (டிஜிசிஏ) மொத்தம் ரூ.2.70 கோடி அபராதம் விதித்துள்ளது. 

கோவாவிலிருந்து தில்லி புறப்பட்ட இண்டிகோ விமானம், பனிமூட்டம் காரணமாக கடந்த திங்கள்கிழமை மும்பைக்குத் திருப்பி விடப்பட்டது. விமானத்திலிருந்து வெளியேறிய பயணிகள், விமானநிலைய தரைப்பகுதியில் அமர வைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் தரையில் அமர்ந்து உணவு உண்ணும் விடியோ பதிவு சமூகவலைதளத்தில் வெளியானது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என இண்டிகோ விமான நிறுவனத்துக்கும் மும்பை சர்வதேச விமானநிலைய நிறுவனத்துக்கும் விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. 

இந்நிலையில், இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.20 கோடி, மும்பை சர்வதேச விமானநிலைய நிறுவனத்துக்கு ரூ.60 லட்சம் என விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு அபராதம் விதித்துள்ளது. 

இதே போன்று மும்பை சர்வதேச விமானநிலைய நிறுவனத்துக்கு டிஜிசிஏ ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தில்லியில் கடந்த டிசம்பரில் நிலவிய பனிமூட்டத்தால், சுமார் 60 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. 

பனிமூட்டமான சூழலிலும் விமானங்களை இயக்கும் திறன்கொண்ட விமானிகளைப் பணியில் அமர்த்தாதது தொடர்பாக ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ அண்மையில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், இந்த விமான நிறுவனங்களுக்கு தலா ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.