கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கேட்டு இளம்பெண் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் மாமனாரை உத்தரப் பிரதேச போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ஏற்கெவே இந்த வழக்கில் இளம்பெண்ணின் கணவர், மாமியார் தயா பதி (55) , மைத்துனர் ரோஹித்(28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மாமனார் சத்வீர் பதியும்(55) கைதாகியுள்ளார். இதையடுத்து இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே வழக்கில் கைதான இளம்பெண்ணின் கணவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில் நிக்கி - விபின் திருமணம் 2016ஆம் ஆண்டு நடந்த நிலையில், அதே நாளில் விபினின் மற்றொரு சகோதரர் ரோஹித்துக்கும் நிக்கியின் சகோதரி காஞ்சனுக்கும் திருமணம் நடந்துள்ளது.
சகோதரிகள் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் நிலையில், நிக்கியிடம் ரூ.36 லட்சம் கேட்டு கணவரும் மாமியாரும் கொடுமைப்படுத்தி வந்த நிலையில், தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் நடந்தேறியிருக்கிறது.
இதில், தீக்காயங்களுடன் அவர் தனது வீட்டு வாசலில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும்போது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் இந்த கொடூரமான சம்பவங்கள் அனைத்தும் நிக்கியின் 6 வயது மகனின் கண் முன்பே நடந்துள்ளது.
ஆக. 21 ஆம் தேதி நடந்த இந்தக் கொடூர சம்பவம் குறித்து, காஞ்சன் அளித்த புகாரின்பேரிலேயே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நிக்கியின் கணவர் விபினை கைது செய்தனர்.
தலைமறைவாகியுள்ள குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராகக் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.