கார் ஓட்டிக்கொண்டே மடிக்கணினியில் வேலை பார்த்த பெண்: காவல்துறை அபராதம்!
கார் ஓட்டுகையில் மடிக்கணினியில் வேலை பார்த்த பெண்ணுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.
பெங்களூரில் கார் ஓட்டிக்கொண்டே மடிக்கணினியில் வேலை பார்த்த பெண்ணுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
பெங்களூரு நகர சாலைகள் எப்போதும் நெரிசல் மிகுந்தவை. இந்தியாவிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நகரங்களில் பெங்களூரு இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவின் சிலிகான் வேலி என்றழைக்கப்படும் பெங்களூரு நகரில் பெண் ஒருவர் கார் ஓட்டிக் கொண்டே மடிக்கணினியில் வேலை பார்த்துச் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இரவு நேரம் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் காரின் ஸ்டியரிங் பகுதியில் மடிக்கணினியை சாய்த்து வைத்து வேலை பார்த்தபடி அந்தப் பெண் சென்றுள்ளார். இந்த சம்பவம் பெங்களூரின் ஆர்டி நகர் பகுதியிலுள்ள சாலையில் நடைபெற்றது. நெரிசல் மிகுந்த பகுதியில் அவர் இவ்வாறு சென்றதை சாலையில் காரில் சென்ற நபர் ஒருவர் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
Advertisement
இதையும் படிக்க | தில்லியில் ரூ. 150 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம்!
இதனைத் தொடர்ந்து, பெங்களூரு போக்குவரத்துக் காவல்துறையினர் நேற்று (பிப். 12) அந்தப் பெண்ணுக்கு அபராதம் விதித்துள்ளனர்.
மேலும், அந்தப் பெண் கார் ஓட்டும் விடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பெங்களூரு காவல்துறையினர், ‘வீட்டிலிருந்து வேலை பாருங்கள். கார் ஓட்டும்போது இல்லை' எனப் பதிவிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் வைரலாகி அந்தப் பெண்ணைப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.