55-ஆவது நாளாக உண்ணாவிரதம்: மருத்துவ உதவி பெற விவசாய அமைப்பின் தலைவா் தல்லேவால் சம்மதம்
மருத்துவ உதவி பெற விவசாய அமைப்பின் தலைவா் தல்லேவால் சம்மதம்!
இந்தியா55-ஆவது நாளாக உண்ணாவிரதம்: மருத்துவ உதவி பெற விவசாய அமைப்பின் தலைவா் தல்லேவால் சம்மதம்
மருத்துவ உதவி பெற விவசாய அமைப்பின் தலைவா் தல்லேவால் சம்மதம்!
விவசாய அமைப்பின் தலைவா் ஜக்ஜித் சிங் தல்லேவால் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் 55-ஆவது நாளாக இன்றும் (ஜன. 19) நீடிக்கிறது.
வேளாண் விளைபொருள்களுக்கு சட்டபூா்வ உத்தரவாதம் வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தில்லி நோக்கி பேரணி செல்ல அனுமதி கேட்டு பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ஷம்பு மற்றும் கனெளரி பகுதிகளில் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மருத்துவ உதவி எதையும் ஏற்காமல் தொடா் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தல்லேவால் மருத்துவ உதவி எடுத்துக்கொள்ள சம்மதித்திருப்பதாக விவசாயிகள் சங்க தலைவர் சுக்ஜீத் சிங் ஹர்டோஜண்டே தெரிவித்துள்ளார்.
மருத்துவ உதவி எதையும் ஏற்காமல் தொடா் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தல்லேவால் 20 கிலோ எடை குறைந்துவிட்டாா்; அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் மருத்துவ உதவி எதையும் ஏற்காமல் நிராகரித்து வந்தார் தல்லேவால்.
இப்போது மருத்துவ உதவி எடுத்துக்கொண்டாலும், அரசுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னரே உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தல்லேவால் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு சண்டீகரில் பிப்ரவரி 14-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.