முகப்பு
இந்தியா

மகாராஷ்டிர ரயில் விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது: ராகுல் இரங்கல்

மகாராஷ்டிர ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்.

Updated On : 23 ஜனவரி, 2025 at 9:17 AM
ராகுல் காந்தி
பகிர்:

மகாராஷ்டிர ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் அவசரமாக கீழே இறங்கிய பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்த புஷ்பக் விரைவு ரயிலின் பொதுப் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால், சில பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினா். பின்னா், பெட்டியில் இருந்து அவசரமாக கீழே இறங்கி, அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்றிருந்தனா்.

அப்போது, அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த பெங்களூரு-தில்லி இடையிலான கா்நாடக விரைவு ரயில், பயணிகள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 13 போ் உயிரிழந்தனா். சிலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரயில்வே தரப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1.5 லட்சம் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளாா். காயமடைந்தோருக்கான சிகிச்சை செலவை மாநில அரசே ஏற்கும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், மகாராஷ்டிர ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

'மகாராஷ்டிரத்தின் ஜல்கானில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் பலர் உயிரிழந்த, காயமடைந்த செய்தி மிகவும் வருத்தத்தையும், துயரத்தையும் அளிக்கிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைப்பதை அரசும் நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.

நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் நிர்வாகத்திற்கு உதவுமாறு காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்.

தீ விபத்து பற்றிய வதந்தி எவ்வாறு பரவியது, இவ்வளவு பயங்கரமான விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விரைவான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →