முகப்பு
இந்தியா

புலி தாக்கி பெண் பலி: குடும்பத்தைச் சந்தித்து பிரியங்கா ஆறுதல்!

கேரளத்தில் புலி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தைச் சந்தித்த பிரியங்கா..

Updated On : 28 ஜனவரி, 2025 at 9:42 AM
பகிர்:

கேரளத்தில் புலி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தைக் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி நேரில் சந்தித்துப் பேசினார்.

வயநாடு எம்பியான பிரியங்கா காந்தி கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்து, சாலை வழியாக வயநாடு நோக்கி வந்தடைந்தார். அங்குப் புலி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கடந்த ஜன.24 அன்று வயநாட்டின் மனந்தாவடி பகுதியிலுள்ள தனியார் காபி தோட்டத்தில் பணிபுரியும் ராதா (வயது 45) என்ற பழங்குடியின பெண் காபிக் கொட்டைகள் பறிப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது, அங்குப் பதுங்கியிருந்த புலி ஒன்று அந்த பெண்ணை தாக்கியது, இந்த தாக்குதலில் அப்பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்த தாக்குதலில் பலியான ராதாவின் உடல் பாதி உண்ணப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடலை சுற்றியிலும் புலியின் கால்தடங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவமறிந்து அங்குக் கூடிய அப்பகுதி பொதுமக்கள் புலியைப் பிடித்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என கேரள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த ராதாவின் குடும்பத்திற்கு ரூ.11 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது. மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கேலூ உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

ராதாவின் இறப்புச் செய்தி அறிந்த வயநாடு மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி, கடந்த வாரம் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும், அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்ததோடு, இந்த பிரச்னையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.