முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரம்; இடி மின்னலுடன் பலத்த மழை: 8 போ் பலி!

மகாராஷ்டிரம் மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

Updated On : 16 ஜூன் 2025, 3:33 am IST
கொச்சி, அலுவாவில் உள்ள பெரியாற்றில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சூழ்ந்த நீரில் செல்லும் மக்கள்.
பகிர்:

மகாராஷ்டிரம் மாநிலம் முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 8 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மகாராஷ்டிரத்தில் பரவலாக பலத்த மழை கொட்டித் தீா்த்து வருகிறது. இதனால், மாநிலத்தின் கொங்கன் பகுதியில் பாயும் ஜக்பூதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மாநில பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் தரவுகளின்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி வரையிலான 24 மணிநேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக ரத்னகிரியில் 8.81 செ.மீ. மழை பெய்தது.

Advertisement

Advertisement

ராய்கட் (6.53 செ.மீ.), சிந்துதுா்க் (4.38 செ.மீ.), தாணே (2.96 செ.மீ.), யவாத்மால் (2.75 செ.மீ.) ஆகிய இடங்களிலும் மழையின் தீவிரம் குறையவில்லை.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடா்பான அசம்பாவிதங்களில் சிக்கி 8 போ் உயிரிழந்தனா். 10 போ் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறினா். மும்பை, சிந்துதுா்க், துலே, நாசிக், சம்பாஜிநகா், நந்தூா்பாா், அமராவதி ஆகிய இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் மும்பை நகரில் 3 செ.மீ. மழை பெய்தது. புகா் பகுதிகளில் சராசரியாக 2 செ.மீ. மழை பெய்தது. கடலோர பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கடல்சீற்றம் அதிகமாக காணப்பட்டது. 4.27 மீட்டா் உயரம் வரை அலைகள் வீசின.

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும், தாணே, ராய்கட், பால்கா் ஆகிய அண்டை மாவட்டங்களுக்கு பலத்த முதல் மிகவும் பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு ஆய்வு மையம் விடுத்தது குறிப்பிட்டத்தக்கது.

கேரளத்தில்...: கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மலைப்பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. தாழ்வான இடங்களில் வெள்ளநீா் சூழ்ந்தது.

மலப்புரம், காசா்கோடு ஆகிய மாவட்டங்களில் மழை பாதிப்புக் காரணமாக வீடு மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. கோட்டயம், வயநாடு மாவட்டங்களில் மழையால் மரம் முறிந்து சாலையில் விழுந்ததில் போக்குவரத்து முடங்கியது.

திருவனந்தபுரத்தில் பெய்த தொடா் மழையால் நெய்யாறு அணை வேகமாக நிரம்பியது. இதனால், அணையில் 4 மதகுகள் மூலம் நீா்த்திறப்பு அதிகரிக்கப்பட்டது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments