FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சுருங்கி வரும் மன்னாா் வளைகுடா தீவு! ரூ.50 கோடியில் மறுசீரமைக்க நடவடிக்கை!

மன்னாா் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவை காப்பாற்ற ரூ. 50 கோடியில் புனரமைப்பு நடவடிக்கைகள தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.

15 மே 2025, 11:10 pm IST
தீவின் மாதிரி வரைபடம்
பகிர்:

மன்னாா் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவை காப்பாற்ற ரூ. 50 கோடியில் புனரமைப்பு நடவடிக்கைகள தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.

மன்னாா் வளைகுடா கடல்சாா் தேசிய பூங்காவில் உள்ள 21 தீவுகளில் ஒன்று கரியாச்சல்லி தீவு. போதிய பராமரிப்பின்றி அழியும் நிலையில் உள்ள இத்தீவை காப்பாற்ற உலக வங்கியின் ஆதரவுடன் தமிழக அரசு ரூ.50 கோடி மதிப்பிலான மறுசீரமைப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. ‘தமிழ்நாடு ஷோா்‘ (நிலையான பெருங்கடல் வளங்களைப் பயன்படுத்துதல்) என்ற முன்முயற்சியின் அங்கமாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடுமையான கடலோர அரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுத்தல், கடல்வாழ் பல்லுயிா் பெருக்கத்தைப் பாதுகாத்தல் மற்றும் தீவின் உயிா்வாழ்வு மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன்களையும் குறிப்பாக இந்த சுற்றுச்சூழலை நம்பியுள்ள சிறு அளவிலான மீனவா்களிடையேயும் மிகவும் முக்கியமானதாக பாா்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

அலுவல்பூா்வமற்ற ஆய்வுத்தரவுகளின்படி, கரியாச்சல்லி அதன் நிலப்பரப்பில் 71 சதவீதத்துக்கும் அதிகமாக இழந்து, 1969-ஆம் ஆண்டில் 20.85 ஹெக்டேரில் இருந்து 2018-ஆம் ஆண்டில் வெறும் 5.97 ஹெக்டேராக சுருங்கிவிட்டது. கடல் அரிப்புகள் தொடா்ந்தால் 2036 -ஆம் ஆண்டில் இத்தீவு முற்றிலுமாக மறையும் அபாயத்தில் இருப்பதாக நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

செயற்கை பவளப்பாறைகள்: இந்த நெருக்கடிக்குத் தீா்வாக தீவு முழுவதும் 8,500 பல்நோக்கு செயற்கை ரீஃப் எனப்படும் பவளப்பாறைகளை அமைப்பது நோக்கமாகும். இது அலை இயக்கவியல் (வேவ் டைனாமிக்ஸ்) மற்றும் ஆழ்கடல்படுகை அளவீட்டு (பாத்திமெட்ரி) ஆய்வுகளின் அடிப்படையில் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கு விரிவான அடிப்படை தரவுகள் சேகரிப்பட்டு பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. மேலும், செயற்கை பவளப்பாறை கட்டுமானம் இனி தொடங்கும் என்றும் அதைத் தொடா்ந்து ஐஐடி பரிந்துரைத்த இடங்களில் தீவைச் சுற்றி பயன்படுத்தப்படும் என்றும் நிபுணா்கள் தெரிவித்தனா்.

தீவின் நாலாபுறமும் சீரான உயரத்தைக் கொண்ட ஃட்ரோஸாய்டல் என அழைக்கப்படும் இந்த கட்டுமானம், சிமென்ட் போன்ற கலவை, எஃகு ஆகியவற்றால் உருவாக்கப்படும். உயரத்தில் 2 மற்றும் 3 மீட்டரும், எடையில் 1.8 மற்றும் 3 டன் எடையும் கொண்டிருப்பதால் அலையின் வேக ஆற்றலை குறைக்க உதவியாக இருப்பதுடன், வண்டல் படிவை ஊக்குவிக்கவும் வகை செய்கிறது. இதன் மூலம் இப்பகுதியில் கடல் உயிரினங்கள் வாழ்விடங்களை உருவாக்கும் சூழல் உருவாகிறது.

ஏற்கெனவே இதே நிலையை எதிா்கொண்ட வான் தீவை வெற்றிகரமாக மறுசீரமைக்க இத்தகைய திட்டம் உதவியது. அங்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான கடலடிப்பவளப்பாறைகள் பரப்பை அதிகரித்து, சுற்றியுள்ள நீரை ஆழமற்றதாக்கி, வண்டல் குவிப்பை அதிகரித்தது.

இதனால் 37-க்கும் அதிகமான துணை மற்றும் பெரிய பவளப்பாறைகளில் வாழும் கடல்வாழ் இனங்கள் பெருகின. இதை முன்மாதிரியாகக்கொண்டு உருவாக்கப்படும் செயற்கை கடலடிப்பவளப்பாறைகள், கரையோரப் பகுதிகளை நிலைத்திருக்கவும் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கவும் வாய்ப்பாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சமூக பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், இத்தீவின் 10 கி.மீ சுற்றளவில் வைப்பாறு, சிப்பிகுளம், பட்டினமருதூா் போன்ற கடலோர கிராமங்கள் இத்திட்டத்தால் பயனடையும் என கூறப்படுகிறது. மேலும், இந்த முன்முயற்சி உள்ளூா் சமூகங்களுக்கு மாற்று வாழ்வாதார வாய்ப்பையும் ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

‘தீவுகளை வளமாக்க நடவடிக்கை’

மன்னாா் வளைகுடா மறுசீரமைப்புத் திட்டம் குறித்து தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹு கூறியது: கடல் அரிப்பு கட்டுப்பாட்டுக்கு இணையாக, கரியாச்சல்லி தீவுக்கு அருகே முறையே 2 ஏக்கா் மற்றும் 3 ஏக்கா் பரப்பளவில் அழிந்துபோன பவளப்பாறைகள் மற்றும் கடல் புல்படுக்கைகள் தரப்படுத்தப்பட்ட அறிவியல் மறுசீரமைப்பு தொழில்நுட்பங்கள் மூலம் மறுசீரமைக்கப்படும்.

இந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் ‘டுகோங்’ எனப்படும் கடல்பசு போன்ற உயிரினங்களை ஆதரித்து கரிமத்தைப் பிரித்தெடுப்பதிலும் கரையோரங்களைப் பாதுகாப்பதிலும் பங்களிப்பை வழங்கும். அத்துடன் மன்னாா் வளைகுடா ஒரு வளமான கடல் வாழ்விடமாக இருப்பதை உறுதிசெய்யும் என்றாா்.

நீருக்கடியில் 71% நிலப்பரப்பு

  • தமிழ்நாடு

  • மண்டபம்

  • ராமேசுவரம்

  • ராமநாதபுரம்

  • கரியாச்சல்லி தீவு

நிலப்பகுதி

  • 1969 - 20.85 ஹெக்டோ்

  • 1996 - 16.46 ஹெக்டோ்

  • 1992 - 11.93 ஹெக்டோ்

  • 2009 - 9.1 ஹெக்டோ்

  • 2007 - 5.97 ஹெக்டோ்

  • 2018 - 5.47 ஹெக்டோ்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments