அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்தை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பதிவிட்டுள்ளார்.
சீனாவில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் சீனா மற்றும் ரஷிய அதிபர்களுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
இதனை விமர்சித்த டிரம்ப், மூன்று பேரின் புகைப்படங்களையும் பகிர்ந்து இருண்ட சீனாவிடம் இந்தியாவையும் ரஷியாவையும் இழந்துவிட்டதாக தோன்றுகிறது எனத் தெரிவித்திருந்தார்.
இதனைக் குறிப்பிட்டு, வெள்ளை மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, இந்தியாவுடனான உறவைப் புதுப்பிப்பீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த டிரம்ப், ”கண்டிப்பாக செய்வேன், மோடியுடன் நண்பராக இருப்பேன். அவர் சிறந்த பிரதமர். குறிப்பிட்ட நேரத்தில் அவர் செய்தது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயானது சக்திவாய்ந்த உறவு, அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை.” எனக் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், அதிபர் டிரம்ப்பின் செய்தியாளர்கள் சந்திப்பு விடியோவை பகிர்ந்துள்ள மோடி, ”ட்ரம்ப்பின் உணர்வுகளையும், எங்கள் உறவுகள் குறித்த அவரது நேர்மறையான வெளிப்பாட்டையும் மிகவும் பாராட்டுகிறேன் மற்றும் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் நேர்மறையான மற்றும் எதிர்நோக்கு மிக்க விரிவான மற்றும் உலகளாவிய பயனுள்ள கூட்டாண்மையைக் கொண்டுள்ளன.” எனப் பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம், கடந்த சில நாள்களாக விரிசல் ஏற்பட்டிருந்த அமெரிக்க - இந்திய உறவு மீண்டும் மேம்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50% இறக்குமதி குறைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டப்படாததாலும், எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததாலும் இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 50 சதவிகிதமாக டிரம்ப் அறிவித்து அமல்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.