கேரளத்தில் பேசிய கார்கே! குஜராத்தில் வலுக்கும் எதிர்ப்பு! என்ன பேசினார்?
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குஜராத் மக்கள் பற்றி கேரளத்தில் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குஜராத் மக்கள் பற்றி கேரளத்தில் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகிற ஏப்ரல் 26 அன்று நடைபெறுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ள கருத்து குஜராத் அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக தலைவர்கள் அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சையாகும் நிலையில் இது குஜராத்தில் காங்கிரஸ் பிரசாரத்தை பாதிக்கும் விதமாக அமைந்துள்ளது. வழக்கமான தேர்தல் பிரசார கருத்துகளின் போக்கை மாற்றி காங்கிரஸ் மீது பாஜகவின் கடுமையான எதிர்ப்பை இது தூண்டியுள்ளது.
Advertisement
காரணம் என்ன?
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேரளத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதை முன்னிட்டு இடுக்கியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசினார். அதில், “கேரள மக்களைத் தவறாக வழிநடத்தாதீர்கள். அவர்கள் மிகவும் புத்திசாலிகள். நன்கு படித்தவர்கள். மோடிஜியும், பினராயி விஜயனும் குஜராத் அல்லது மற்ற இடங்களிலுள்ள படிப்பறிவில்லாத மக்களை முட்டாளாக்கலாம். ஆனால், கேரள மக்களை முட்டாளாக்க முடியாது” என்று பேசினார்.
குஜராத்திகளைப் படிப்பறிவில்லாதவர்கள் என்று கார்கே பேசியது குஜராத்தில் பரவலான எதிர்ப்பைப் பெற்றுள்ளது. இதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜக இதனை மிகப்பெரிய பிரச்னையாக மக்களிடம் எடுத்த்ச் சென்றதுடன் பிரசார முழக்கமாக இதனை மாற்றியுள்ளது. மேலும், இதனை அரசியல் தளத்தில் விவாதமாகவும் பாஜக எடுத்துச் சென்றுள்ளது.
இதுபற்றிப் பேசிய குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், “குஜராத் மக்கள் பற்றி கார்கே பேசியது மிகவும் ஆட்சேபனைக்குரியது. இந்தக் கருத்து 6 கோடி குஜராத்திகளின் உணர்வை அவமதிப்பது மட்டுமின்றி சர்தார் வல்லபாய் படேல், மகாத்மா காந்தி போன்றவர்கள் வாழ்ந்து செதுக்கிய இந்த மண்ணின் பெருமையைக் காயப்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் தேசத்தைக் கட்டமைப்பதிலும், முன்னேற்றுவதிலும் எப்போது முதன்மையாக இருந்து வருகிறது. எப்போதும் அப்படியே இருக்கும். இத்தகைய கருத்துகள் காங்கிரஸ் கட்சியின் குறுகிய மனப்பான்மையை காட்டுகின்றது.
குஜராத் வாக்காளர்கள் இதற்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள், விரைவில் கேரளம் போன்ற மாநிலங்கள் கூட காங்கிரஸை நிராகரிக்கும்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கார்கே பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நேரத்தில் இந்த சர்ச்சை எழுந்ததால் அதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. இதில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்து பிரசாரத்தைத் தொடர காங்கிரஸ் கட்சிக்கு சவால் ஏற்பட்டுள்ள நிலையில் பாஜகவுக்கு இது சாதகமாக மாறியுள்ளது.