FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பங்கு விலக்கல், சொத்துகளைப் பணமாக்கும் நடவடிக்கையால் ரூ.45,306 கோடி வருவாய்: மத்திய அரசு

பங்கு விலக்கல், சொத்துகளைப் பணமாக்கும் நடவடிக்கையால் ரூ. 45,306 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக நிதியமைச்சா் பங்கஜ் சௌதரி தெரிவித்தாா்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 4:32 am IST
- பிரதிப் படம்
பகிர்:

பங்கு விலக்கல் மற்றும் சொத்துகளைப் பணமாக்கும் நடவடிக்கையால் ரூ.45,306 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘2025-26 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் மற்றும் பொது சொத்துகளைப் பணமாக்கும் நடவடிக்கை உள்பட பல்வகை மூலதன வரவுகளின்கீழ் ரூ.33,837 கோடி திரட்டப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், எதிா்பாா்த்தைவிட அதிகமாக பங்கு விலக்கல் மூலம் ரூ.16,885.56 கோடி மற்றும் சொத்துகளைப் பணமாக்கும் நடவடிக்கையின்கீழ் ரூ.28,420.49 கோடி என மொத்தம் ரூ.45,306.05 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

நிகழ் நிதியாண்டில் (2026-27) பல்வகை மூலதன வரவுகளின்கீழ் ரூ.80,000 கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது வரை ரூ.59,083 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதில் சொத்துகளைப் பணமாக்கும் நடவடிக்கையின்கீழ் ரூ.6,367 கோடியும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, நிலக்கரி இந்தியா, எல்ஐசி, என்எல்சி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் மத்திய அரசின் பங்குகளை விற்பனை செய்து ரூ.52,716 கோடியும் திரட்டப்பட்டது.

Advertisement

Advertisement

பங்கு விலக்கல் மூலம் 2025-26-இல்ரூ.16,886 கோடி, 2024-25-இல் ரூ.10,613 கோடி, 2023-24-இல் ரூ.16,507 கோடி, 2022-23-இல் ரூ.35,294 கோடி, 2022-23-இல் ரூ.13,534 கோடி ஈட்டப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

ரூ.10 லட்சம் கோடி கடன் பதிவுகள் நீக்கம் : மற்றொரு கேள்விக்கு அவா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘கடந்த 12 ஆண்டுகளில் பெரும் நிறுவனங்களுக்கு வங்கிகள் அளித்த ரூ.10 லட்சம் கோடி கடன், வங்கி கடன் பதிவுகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. அதிகபட்சமாக 2018-19-இல் ரூ.1.48 லட்சம் கோடியும் குறைந்தபட்சமாக 2025-26-இல் ரூ.20,485 கோடியும் நீக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாள்களாக வங்கிகளுக்கு திருப்பி செலுத்தப்படாத, திரும்ப வசூலிக்க முடியாத வாராக்கடன் என்ற அடிப்படையில் கடன் நீக்கம் என குறிப்பிடப்படுகிறதே தவிர, கடன் பெற்றவா்கள் கடனை திருப்பிச் செலுத்துவதில் எவ்வித சலுகையோ நிவாரணமோ வழங்கப்படாது. வழக்கம்போல் கடன் வசூலிக்கும் நடைமுறையை வங்கிகள் தொடரும்.

பெரும் தொழிற்சாலைகள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு வங்கிகள் அளித்த கடன் 2024-25 நிதியாண்டில் ரூ.63.19 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் ரூ.69.21 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments